நடிகர் ஆர்யா நாயகனாக நடித்திருக்கும் கேப்டன் படத்தின் முதல் பார்வைவெளியாகியுள்ளது.
இந்தக் ‘கேப்டன்’ திரைப்படத்தை Think Studios நிறுவனம், நடிகர் ஆர்யாவின் The Show People நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கின்றது. கொரோனா பொது முடக்க காலத்தில் ஆர்யா நடித்த டெடி என்கிற படம் ஓடிடியில் வெளியானது. அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆர்யா-சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது.
இப்படத்தில் சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத்ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்க, எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன்.
இந்தப் படத்தின் முதல் பார்வை 4.04.2022 அன்று வெளியாகியுள்ளது. இந்த முதல் பார்வையை உருவாக்க, படக் குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்ததாக கூறுகின்றனர்.
கம்ப்யூட்டரில் உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரம் சரியான நிலையை அடைய, ஒவ்வொரு மூலக்கூறும் பிக்சல்கள் மூலம் வளர்க்கப்பட வேண்டும். இந்த ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்கியதன் முக்கிய நோக்கம், இதுவரை பார்த்திராத சிறப்பான திரை அனுபவத்தை பார்வையாளர்களுக்கு தர வேண்டும் என்பதே ஆகும் என்கிறார் இயக்குநர் .
இந்த சிங்கிள் ஃப்ரேம், திரைப்படத்தை பற்றிய ஒரு வடிவத்தை தருகிறது. ரத்தம் சூடு பிடிக்கும் பரபர த்ரில் சவாரியாக இப்படம் இருக்கும். இந்தப் படத்திற்காக ஆர்யா தந்த அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு குறித்து தயாரிப்பாளர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆர்யா எனும் அற்புதமான நடிகர் இந்தக் கேப்டன் படத்திற்கு ஆன்மாவைக் கொடுத்தார் என்று முழு படக் குழுவும் சொல்கிறது.
**-இராமானுஜம்**