நம்புங்கள், உங்கள் வீட்டு நாய்க்காக ஒரு சானல் வரப்போகிறது!

Published On:

| By Balaji

ஆன்மீகத்துக்கு ஒரு சானல், 24 மணி நேர செய்திகளுக்காக ஒரு சானல், குழந்தைகளுக்காக ஒரு சானல், பாடல்களுக்காக ஒரு சானல், காமெடிக்காக ஒரு சானல் என்பது போய் இப்போது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணியான நாய்க்கும் ஒரு சானல் உருவாகியுள்ளது.

நமது செல்லப்பிராணிகள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள், அவர்களின் நடத்தை முறைகள் என்ன, அவற்றின் பதில்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது குறித்து நாம் புரிந்துகொண்டும் இருக்கிறோம், ஆச்சரியப்பட்டும் இருக்கிறோம். கடந்த சில வருடங்களாக மில்லியன் கணக்கான முதலீட்டில் நடந்த ஆராய்ச்சியின் முடிவில், ஒரு மறுக்க முடியாத உண்மையை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்: நமது செல்லப்பிராணிகள், குறிப்பாக நாய்கள், தனது எஜமானரை விட்டு நீண்ட நேரம் பிரிந்திருக்கும் போது, பிரிவினை கவலையால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. நவீன உலகில், குடும்பத்தின் பெரும்பாலானவர்கள் நாள் முழுவதும் வெளியே இருக்கும் சூழல் உள்ளது. இது துரதிர்ஷ்டவசமாக தவிர்க்க முடியாததாகவும் உள்ளது. ஆனால் இதன் மூலம் நாய்கள், எல்லா வழிகளிலும், போதுமான உடற்பயிற்சியைப் பெறாமல், விளையாடுவதற்கு தனது எஜமானரின் துணை இல்லாமல் தவிக்கும் நிலைக்கு செல்கிறது. இது நாய்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சில ஆண்டுகள் முன்பு, இதனை கருத்தில் கொண்டு நாய்களுக்கு என்று பிரத்யேகமாக சானல் ஒன்று உருவாக்கப்பட்டது. 24 மணி நேரமும் ஓடக்கூடிய DogTV எனப்படும் இந்த சானல், முன்னணி ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட 60 ஆய்வுகளின் முடிவுகளின்படி வடிவமைக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சானல், அமெரிக்காவில் துவங்கப்பட்டது. நாம் பார்ப்பது போலவே அவை வண்ணங்களைக் காண்பதில்லை, அவற்றின் செவிவழி உணர்வு வேறு மட்டத்தில் இயங்குகிறது. இதனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட DogTVயின் நிகழ்ச்சிகள் தளர்வு, உருவகப்படுத்துதல், வெளிப்பாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகின்றன.

அமெரிக்காவில் 70 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளையும், உலகளவில் 250 மில்லியனுக்கும் அதிகமான வீடுகளையும் சென்றடையும் DogTV, இனி இந்தியாவிலும் ஒளிபரப்பாகவுள்ளது. இப்போது உலகளாவிய அணுகலுக்கான சேனலைத் திறக்க அமகி மீடியா லேப் நிறுவனத்துடன்(Amagi Media Labs) இணைந்துள்ள DogTV, இந்த ஆண்டின் பிற்பகுதியில், உலக சந்தையில் முக்கிய பிரதேசமாகக் கருதப்படும் இந்தியாவிலும் தொடங்க திட்டமிட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்திய குடும்பங்களில் 19 மில்லியன் செல்லப்பிராணிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 85 சதவிகித குடும்பங்கள் நாய்களை வளர்ப்பு பிராணிகளாக கொண்டுள்ளது. தற்போது இணையம் வழியாக டெல்லி உள்ளிட்ட நகரங்களின் வாடிக்கையாளர்களிடம் DogTV கருத்து கணிப்பை கேட்டு வருகிறது என லைவ் மிண்ட் இணைய நாளிதழ் கூறியுள்ளது.

உள்ளடக்கம் மற்றும் விநியோகத்தின் மூத்த துணைத் தலைவரான யோவ் ஜீவி கூறும் போது, DogTV என்பது மனித தோழமைக்கு மாற்றாக இருக்கக்கூடாது என்பதையும், நீண்ட நேரம் நாய்களை தனியாக விட்டுவிட உங்களை எங்கள் சானல் ஊக்குவிப்பதில்லை” என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இந்த சானலை இணையம் வழியாக எல்லோரும் பார்க்க முடியும்.

**-முகேஷ் சுப்ரமணியம்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share