�சுஷாந்த், ஏன் இவ்வளவு சீக்கிரம் சென்றுவிட்டாய்? பிரதமர், பிரபலங்கள் இரங்கல்!

Published On:

| By Balaji

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சின்னத்திரை நடிகராக இருந்து பாலிவுட் கதாநாயகனாக வளர்ந்தவர் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ மூலமாக கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததுடன் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நேரத்தில் 34 வயதேயான சுஷாந்த் சிங் ராஜ்புட் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருப்பதுடன் தங்கள் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவரது மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், விரைவாகவே சென்று விட்டார். தொலைக்காட்சித் தொடர்கள் மூலமாகவும், திரைப்படங்கள் வழியாகவும் பொழுதுபோக்கு உலகில் பலருக்கும் ஊக்கமாக இருந்த அவர், என்றும் மனதில் நிற்கும் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவரது குடும்பத்தினரையும், ரசிகர்களையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். ஓம் ஷாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Sushant Singh Rajput…a bright young actor gone too soon. He excelled on TV and in films. His rise in the world of entertainment inspired many and he leaves behind several memorable performances. Shocked by his passing away. My thoughts are with his family and fans. Om Shanti.

— Narendra Modi (@narendramodi) June 14, 2020

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், “நடிகர் சுஷாந்த் சிங் இறந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது;அவர் ஒரு திறமையான நடிகர். அவர் நடித்த சிச்சோர் படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் தயாரிப்பாளரும் எனது நண்பருமான சஜித்திடம் நான் அந்த படத்தை எந்த அளவிற்கு ரசித்தேன் என்பதை கூறினேன்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்திலும் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, “சுஷாந்த் சிங் ராஜ்புட் குறித்து அறிந்து அதிர்ந்துவிட்டேன். இதைக் கடந்து வருவது கடினமாக இருக்கிறது. அவரது ஆத்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களும் மன உறுதி கிடைக்கவும் இறைவனை வேண்டுகிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங், “அவரது இழப்பை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் நபர். திறமைசாலி. பல துறைகளிலும் அதிக ஆர்வம் கொண்டவர். இல்லை. இதை தாங்கிக்கொள்ள இயலவில்லை” என்று தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியா, “சுஷாந்த் சிங் இறந்த செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது. அவரை இழந்து தவிக்கும் அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்”என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் கெளதம் கார்த்திக் தனது பதிவில், “சுஷாந்த் மிக இளம் வயதில், மிக விரைவாகவே சென்று விட்டார். மன அழுத்தம் என்பது உண்மையானது. ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும். அவர் எத்தகைய விஷயங்களை கடந்து வருகிறார் என்பது நமக்குத் தெரியாது. அவரை நேசிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ப்ளீஸ், ப்ளீஸ் இது போலி செய்தி என்று என்னிடம் கூறுங்கள். கண்ணீர் வழிகிறது. வாழ்க்கையில் அற்புதமான பல கதாபாத்திரங்களைக் கொண்டுவந்தவர். இத்தனை சிறு வயதில் இவர் போயிருக்கக் கூடாது. நிறைய செய்ய வேண்டியது இருக்கிறது. நிறைய சாதிக்க வேண்டியது இருக்கிறது. என் நெஞ்சம் உடைகிறது” என்று அவர் கூறியுள்ளார்.

சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட செய்தியை அறிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அவர்களும் தங்கள் சமூகவலைதளப் பக்கங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

**-இரா.பி.சுமி கிருஷ்ணா**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share