கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள், சினிமா பிரபலங்களுடன் நட்பு இருப்பதாக கூறி தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்பட பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்து இருப்பதாக ஏற்கனவே இவர் மீது புகார்கள் உள்ளன.
தமிழ்நாட்டு அரசியலிலும் சர்ச்சைக்குள்ளானவர்தான் இவர். 2018 ஆம் ஆண்டு டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற புகாரின் அடிப்படையில் கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது தினகரனுக்காக தரகு வேலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்தான் இந்த சுகேஷ் சந்திரசேகர்.
இதற்கிடையில், 200 கோடி ரூபாய் அளவுக்கு பண மோசடி செய்ததாக சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் மற்றொரு வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார்.
சில நாட்களுக்கு முன் சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக், ஜாக்குலின் பெர்னாண்டஸும் சுகேஷும் காதலித்து வந்தனர் என கூறியிருந்தார். இதை ஜாக்குலின் வழக்கறிஞர் மறுத்திருந்தார். இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகை ஜாக்குலின் முத்தம் கொடுக்கும் செல்பி புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பாகி வருகிறது.
ஜாக்குலினும் சுகேஷும் நான்கு முறை சென்னையில் சந்தித்துள்ளனர்.
இதற்காக தனி விமானத்தை சுகேஷ், அவருக்கு ஏற்பாடு செய்ததாகவும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையை சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் இந்திபடங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
**-இராமானுஜம்**
�,