}சோனு சூட் உதவி: ஆரத்தி எடுத்த மும்பை தமிழர்கள்!

Published On:

| By Balaji

மும்பையிலுள்ள புலம்பெயர் இட்லி விற்பனையாளர்களை, தமிழ்நாடு திரும்ப பேருந்து ஏற்பாடு செய்த சோனு சூட்-க்கு ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினர் தமிழர்கள்.

இந்தி நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக, வெளிமாநிலங்களில் சிக்கிய புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார் சோனு சூட். இவரின் இந்த உதவியை சமூக ஊடகங்களைச் சேர்ந்த பலரும் பாராட்டி வருகின்றனர். அண்மையில் மும்பையில் சிக்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை உத்தராகண்டில் உள்ள தங்கள் வீட்டிற்கு ஒரு விமானம் மூலம் அனுப்பியதற்கு, அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில், சயான்கோலிவாடா பகுதியில் சிக்கிய தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி செய்யுமாறு, அந்த பகுதியை சேர்ந்த சிலர், சோனு சூட்டின் அலுவலகத்துக்கு சென்று கோரிக்கை வைத்தனர். இவர்கள் அனைவரும் அப்பகுதியில் இட்லி விற்பனை செய்பவர்கள் ஆவர். இதையடுத்து சோனு சூட் சயான் கோலிவாடாவில் சிக்கிய சுமார் 180 தமிழர்களை விமானம் மூலம் அனுப்பி வைக்க முயற்சி செய்தார். எனினும் அதற்கு முறையான அனுமதி கிடைக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், உணவு விற்பனையாளர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சோனு பேருந்துகளை ஏற்பாடு செய்தார். இதில் முதல் பஸ் நேற்று மாலை வடலா டி.டி. பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றது. நடிகர் சோனு சூட் தேங்காய் உடைத்து பஸ்சை அனுப்பி வைத்தார். தங்களுக்கு சொந்த ஊர் திரும்ப உதவி செய்த நடிகர் சோனு சூட்டிற்கு தமிழ் பெண்கள் ஆரத்தி எடுத்து நன்றி கூறினர்.

[ஆரத்தி எடுத்த வீடியோ](https://www.edtr.ai/nj5)

**-முகேஷ் சுப்ரமணியம்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share