சூர்யாவுக்கு எதிராக நீதிபதி எழுதிய நள்ளிரவு கடிதம்!

entertainment

நீட் தேர்வு மற்றும் மாணவர்கள் தற்கொலை தொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில்  நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்திருந்தார். இந்நிலையில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளதாக  தி இந்து ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில், மதுரை, நாமக்கல், தருமபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மனசாட்சியை உலுக்குவதாக  நடிகர் சூர்யா நேற்று (செப்டம்பர் 13) இரவு 8 மணியளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 அதில், ”தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு வாழ்த்து சொல்வதற்குப் பதிலாக ஆறுதல் சொல்வது போல் அவலம் எதுவுமில்லை. கொரோனா தொற்று போன்ற உயிர் அச்சம் மிகுந்த பேரிடர் காலத்தில்கூட மாணவர்கள் தேர்வெழுதி தங்கள் தகுதியை நிரூபிக்க நிர்பந்திக்கப்படுவது வேதனை அளிக்கிறது. கொரோனா அச்சத்தால்‌ உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்சிங்‌’ மூலம்‌ நீதி வழங்கும்‌ நீதிமன்றம்‌, மாணவர்களை அச்சமில்லாமல்‌ போய்‌ தேர்வு எழுத வேண்டும்‌ என்று உத்தரவிடுகிறது” என்றும் குறிப்பிட்டிருந்தார். சூர்யாவின் இந்த அறிக்கை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யா மீது  சென்னை உயர்நீதி மன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று கோரி நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹிக்கு நேற்று இரவே கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் இணையப்பக்கத்தில்  நள்ளிரவில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது

அதில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் , “என்னுடைய கருத்துப்படி, அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும், நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறைமதிப்புக் குட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடரலாம். மேலும், இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவின் அறிக்கை விடுமுறை நாளான ஞாயிறு இரவு 8 மணியளவில் வெளியானது. அதே சமயத்தில் இரவு 12 மணியளவில் நீதிபதி எழுதிய கடிதம் தி இந்து இணையப்பக்கதில் வெளியாகிறது. விடுமுறை நாளன்று இரவில் ஒரு நீதிபதி தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதுகிறார். அது தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதம். அது அவரிடம் சென்று சேர்ந்ததா? அவர் படித்தாரா? என்பது கூட தெரியாது.

ஆனால், அதற்குள் நள்ளிரவில் ஊடகத்தில் வெளியாகிறது.இவ்வளவு வேகமாக சூர்யாவுக்கு எதிராக வேலைகள் நடக்க என்ன காரணம்?. சூர்யா நீட்டுக்கு எதிராகச் சொன்ன வாதங்கள் மக்களிடம் சென்று சேருவதற்குள் அவர் குற்றம் செய்துவிட்டார் என்கிற கருத்தை உருவாக்க ‘அரசியல் பின்புலத்துடன்’ இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

இந்த சூழலில்  சூரரை போற்று நாயகனுக்கு ஆதரவாக ட்விட்டரில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0