x
எண்பது வயதில் எனது ஞானத்தந்தையை இழந்துவிட்டேன் என்று நடிகர் சிவக்குமார் கி.ரா.அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். கி.ரா. வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு குடியிருப்பில் அவரது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.
கி.ரா.வின் சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற்றது. கி.ரா.வின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் சிவகுமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத்தந்தை 99 வயது வாழ்ந்த கி.ரா.வை இழந்துவிட்டேன். கி.ரா.வும், கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய்-தந்தையர். எனக்கும் அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் புதுச்சேரி சென்று கலந்து கொண்டிருக்கிறேன்.
அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல்காட்டு கடுதாசி, போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். கொரோனாபொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
**-இராமானுஜம்**
�,