3-1 எனத் தொடரை வென்று, உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் முனைப்பில் இந்தியாவும், போட்டியை வென்று தொடரை 2-2 என சமன் செய்ய இங்கிலாந்தும் இன்று அகமதாபாத்தில் போட்டியிடுகின்றன.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான நான்கு டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் முதல் இரண்டு போட்டிகள் நடந்தன. முதல் டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது டெஸ்டில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
அகமதாபாத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்தியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானத்தில் இன்று (மார்ச் 4) தொடங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான அணி இந்த டெஸ்டை டிரா செய்தாலே தொடரைக் கைப்பற்றிவிடும். டிரா செய்து தொடரை வெல்லுமா அல்லது இங்கிலாந்தை மீண்டும் வீழ்த்தி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றுமா என்று ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நுழைய, இந்தியா இந்த டெஸ்டில் தோல்வியைத் தவிர்க்க வேண்டும். இங்கிலாந்து அணி ஏற்கனவே சாம்பியன்ஷிப் வாய்ப்பை இழந்து விட்டது. இங்கிலாந்து அணி ஒருவேளை இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா வாய்ப்பை பெறும். நியூசிலாந்து அணி ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தது.
இந்த நான்காவது போட்டியும், மூன்றாவது போட்டி நடைபெற்ற அதே நரேந்திர மோடி மைதானத்தில்தான் நடைபெற இருக்கிறது. கடந்த போட்டியில் இருந்ததைப் போலவே, சுழல் பந்து வீச்சாளர்களின் சொர்க்கமாகவே, இந்த பிட்ச் அமையப் போகிறது என்பதே பெரும்பாலானவர்களின் பார்வையாக இருக்கிறது. எனினும் மூன்றாவது போட்டி போல, இது பிங்க் பால் டெஸ்டாக, பகலிரவாக நடைபெறாத காரணத்தால், சென்ற போட்டி சென்ற வழித்தடத்தில், இந்தப் போட்டி நகர வாய்ப்புகள் மிக மிகக் குறைவே.
காலை 9.30 மணிக்குத் தொடங்கும் இந்தப் போட்டி, கேப்டனாக கோலியின் 60ஆவது போட்டி. கேப்டனாக 12,000 ரன்களைக் கடந்தவர் என்ற பெருமையைப் பெற இன்னும், 17 ரன்களே தேவை எனப் பல சாதனைகள், கோலிக்காகக் காத்திருக்கின்றன.
பிங்க் பால் டெஸ்ட் இரண்டு நாட்களில் முடிய, ரெட் பால் ஆட்டமாவது ஐந்தாவது நாளை அகமதாபாத்தில் தொடுமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
**-ராஜ்**
�,