தமிழ் சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர். படமாக்க வேண்டும் என ஆசைப்பட்ட நாவல் கல்கியின் பொன்னியின் செல்வன். எத்தனையோ நடிகர்களும், இயக்குநர்களும் ஆசைப்பட்ட படைப்பை உருவாக்கிவருகிறார் மணிரத்னம்.
2019 ஆம் ஆண்டு டிசம்பரில் தாய்லாந்து பகுதிகளில் முதல்கட்டப் படப்பிடிப்பை துவங்கியது பொன்னியின் செல்வன் டீம். அதன்பிறகு பாண்டிச்சேரி, சென்னை பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. அதோடு சரி, கொரோனாவினால் படப்பிடிப்பு நடக்கவில்லை. தற்பொழுது, கடந்த மாதத்திலிருந்து படப்பிடிப்பு துவங்கி நடந்துவருகிறது.
ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக மூன்று செட்களில் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் பாகுபலி படப்பிடிப்பு நடந்த இடத்தில் தான், இந்தப் படத்துக்கும் செட் போட்டு படப்பிடிப்பு நடத்திவருகிறார்கள். கூடுதலாக, ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் முக்கால் பாக இடத்தை பொன்னியின் செல்வன் படக்குழுவே ஆக்கிரமித்திருக்கிறதாம்.
லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், 200 கலைஞர்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறதாம் படக்குழு. முன்னணி நடிகர்களும் இந்த பாடல் காட்சி ஷூட்டிங்கில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஜெயம்ரவி, கார்த்தி, விக்ரம், ரகுமான், சரத்குமார் உள்ளிட்ட பலர் தற்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்கள். இதில், கோப்ரா படத்திற்கு நடுவில் தான் இந்தப் பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் விக்ரம். அடுத்த மாதம் மீண்டும் கோப்ரா ஷூட்டிங்கிற்காக ரஷ்யா செல்கிறார் விக்ரம்.
எப்படியும், முப்பது சதவிகித படப்பிடிப்பு மீதம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். பொன்னியின் செல்வன் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவருகிறார். ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். அதோடு, தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றிவருகிறார்.
**-ஆதினி**�,