நடிகைகள் பிரியா பவானி சங்கர் மற்றும் பார்வதி இருவரும் இணைந்து புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார்கள்.
செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியலுக்குள் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை பிரியா பவானி சங்கர். பின்பு ‘மேயாத மான்’ படம் மூலமாக சினிமாவுக்குள் எண்ட்ரி கொடுத்த பிரியா ’கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’ என பல வெற்றி படங்களை கொடுத்தார். தற்போது இவர் கைவசம், ‘குருதி ஆட்டம்’, ‘பொம்மை’, ‘ஹாஸ்டல்’, ‘ருத்ரன்’, ‘யானை’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘அகிலன்’, ‘இந்தியன்2’ என கிட்டத்தட்ட அரை டஜனுக்கும் அதிகமான படங்கள் கைவசம் உள்ளன.
இடையில் ’டைம் என்ன பாஸ்’ உள்ளிட்ட சில வெப் சீரிஸ்களிலும் நடித்தார் பிரியா பவானி சங்கர். இந்த நிலையில், மீண்டும் ஒரு வெப் சீரிஸ்ஸில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிரியா பவானி சங்கர் மற்றும் ‘பூ’ பார்வதி இணைந்து நடிக்கின்றனர் .
’நடிகை பார்வதியின் தீவிர ரசிகை நான். இந்த புகைப்படங்களில் எனது முகத்தில் உள்ள மகிழ்ச்சியும் ஆர்வமுமே இதற்கு சாட்சி’ என பார்வதி, நாக சைதன்யா மற்றும் இயக்குநர் விக்ரம் குமாருடன் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பகிர்ந்திருக்கிறார்.
’தூதா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸை ‘24’, ’யாவரும் நலம்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் விக்ரம் குமார் இயக்குகிறார். நடிகர் நாக சைதன்யா இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு மொழியில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
**ஆதிரா**