விஜய்சேதுபதி , பார்த்திபன் நடிக்கும் துக்ளக் தர்பார் படத்தின் டீஸர் வீடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அறிமுக இயக்குநரான டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ், மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் ‘துக்ளக் தர்பார்’. நானும் ரவுடிதான் படத்திற்குப் பிறகு, மீண்டும் விஜய்சேதுபதி – பார்த்திபன் கூட்டணியில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தில் இரண்டு பேருக்குமே சமமான கதாபாத்திரம் என்று சொல்லப்படுகிறது.
மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் பார்த்திபனின் கதாபாத்திரம் அரசியல்வாதி சீமானை பிரதிபலிப்பதாக இருப்பதாக சீமானின் தம்பிகள் கொந்தளிக்க துவங்கியிருக்கிறார்கள். அதோடு, வசனங்கள் கூட நாம் தமிழர் கட்சிக்கு எதிராக இருப்பதாக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியிலிருந்து விஜய்சேதுபதிக்கு போனில் அழைத்து பேசியிருக்கிறார்கள். அதற்கு விஜய்சேதுபதி அப்படியா, எனக்குத் தெரியவே தெரியாது என கூறிவிட்டாராம். அதெப்படி, என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என தெரியாமலா நடிப்பார் என கோவத்தில் இருக்கிறார்களாம் சீமானின் தம்பிகள்.
இந்த நேரத்தில், துக்ளக் தர்பார் இயக்குநர் குறித்து விசாரித்தால், பல புதுத்தகவல்கள் கிடைத்தது. வர்ணம் எனும் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார் பிரசாத் தீனதயாளன். அப்போது, அந்தப் படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக நடித்திருக்கிறார் விஜய்சேதுபதி. அப்போதே இருவருக்கும் நட்பு துவங்கியிருக்கிறது.
அந்த நேரத்தில் தான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்க புதுமுகத்தை தேடிக்கொண்டிருந்திருக்கிறார் பாலாஜி தரணிதரன். பிரசாத் தீனதயாளன் மூலமாக அறிமுகமாகியிருக்கிறார் விஜய்சேதுபதி. அப்படி தான், பாலாஜி தரணிதரனுக்கும் விஜய்சேதுபதிக்கும் நட்பு உருவாகியிருக்கிறது. விஜய்சேதுபதிக்கு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தின் மூலமாக தான் விஜய்சேதுபதி எனும் நடிகர் வெளியில் தெரிய துவங்கினார். அந்த நன்றிக் கடனுக்காக, விஜய்சேதுபதி கொடுத்த படம் தான் துக்ளக் தர்பார். அதோடு, நான்கு வருடத்துக்கு முன்பாகவே துக்ளக் தர்பார் படத்தின் பணிகளை துவங்கிவிட்டாராம் இயக்குநர். தற்பொழுது அரசியல் கட்சிகளிலிருந்து எதிர்ப்பு வந்திருப்பதை எப்படி சமாளிப்பது என யோசித்துக் கொண்டிருக்கிறதாம் படக்குழு.
**-ஆதினி**�,