pஇந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர்!

Published On:

| By Balaji

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்கள் வசூல் சாதனை நிகழ்த்துகிறதோ இல்லையோ யார் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்கிற விவாதங்களுக்கு சமூக வலைதளங்களில் குறைவிருக்காது.

இதனை ரஜினி, அஜித், விஜய் ரசிகர்கள் ஒரு வேலையாக, பிரச்சாரமாக செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் ரஜினிகாந்த் என நீண்ட காலமாகவே சொல்லி வருகிறார்கள். ஆனால், அவரை விட நடிகர் விஜய் அதிக சம்பளம் வாங்குகிறார் என்பது தான் மாஸ்டர் படத்துக்கு பிந்தைய நிலைமை.

அதனை ரஜினி இனி மேல் சமன் செய்வதற்கு கூட வாய்ப்புகள் இல்லை என்கிறது தமிழ் சினிமா வட்டாரம். தமிழ் சினிமா தகவல் இப்படியிருக்க இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் யார் என்கிற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்த ‘2.0’ படத்தில் வில்லனாக நடித்தவர் அக்‌ஷய் குமார்.

பிரபல பத்திரிகையான ‘ஃபோர்ப்ஸ்’ கடந்த வருடம் ஜுன் 2019 முதல் மே 2020 வரையில் அதிகமாக சம்பாதித்துள்ள பிரபலங்களின் டாப் 100 பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அக்‌ஷய் குமார் 48.5 மில்லியன் யுஎஸ் டாலர், இந்திய மதிப்பில் 366 கோடி ரூபாய் சம்பாதித்து 52 வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த வருடம் 65 மில்லியன் யுஎஸ் டாலர், அதாவது 466 கோடி ரூபாய் சம்பாதித்து 33வது இடத்தில் இருந்தவருக்கு இந்த வருடம் பின்னடைவு தான் என்றாலும் இந்திய அளவில் முதல் இடம்.

ஹாலிவுட் பிரபலங்களான வில் ஸ்மித் (69வது இடம்), ஜாக்கி சான் (80), ஏஞ்லினா ஜோலி (99), ஆகியோரை அக்‌ஷய் குமார் முந்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடித்து கடந்த வருடம் ‘கேசரி’, ‘மிஷன் மங்கள்’, ‘ஹவுஸ்ஃபுல் 4’, ‘குட் நியூஸ்’ ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த வருடத்தில் இன்னும் எந்தப் படமும் வெளியாகவில்லை. தற்போது, ‘லட்சுமி பாம்’, ‘பிரித்விராஜ்’, ‘சூர்யவன்ஷி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தியாவில் கொரோனா நிவாரண நிதிக்கு அதிகமாக(25 கோடி ரூபாய்) வழங்கிய ஒரே நடிகர் அக்‌ஷய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

**-இராமானுஜம்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share