கடலோர மக்களின் வாழ்வை பேசும் படம்!

Published On:

| By Balaji

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் தயாரிப்பாளர் கே. வேணு மாதவ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஜெட்டி’.

இந்தப் படத்தில் நந்திதா சுவேதா, புதுமுகம் மான்யம் கிருஷ்ணா, கிஷோர், மைம்’ கோபி, சுமன் ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் இணை ஒளிப்பதிவாளரான வீரமணி இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநர் பி.வாசுவின் உதவியாளரான தி.ரமேஷ் பிரபாகரன் படத்திற்கு வசனம் எழுதி இருக்கிறார். கார்த்திக் கொடக்கன்ட்லாவின் இசையில் அத்தனை பாடல்களையும் கவிஞர் டாக்டர் கிருதியா எழுதியுள்ளார். விஜய் பிரகாஷ், விஜய் யேசுதாஸ், பாலக்காடு ஸ்ரீராம், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், வைக்கம் விஜயலக்ஷ்மி பத்மஜா, ஸ்ரீனிவாசன் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்தக் கொரோனா காலத்திலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் அறிமுக இயக்குநரான பி.சுப்பிரமணியம். கடல் சார்ந்த மீனவ கிராமங்களின் வாழ்வியலை யதார்த்தமாக படம் பிடித்துக் காட்டி, அவர்களுடைய பிரச்சினைகளை சொல்வதோடு மட்டும் அல்லாமல், அதற்குண்டான நிரந்தர தீர்வுகளையும் சொல்லும் உயர்ந்த நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம்

நவீனமான இந்த நூற்றாண்டிலும், கலாச்சாரம், கட்டுப்பாடுடன் வாழும் கடலோர மீனவ கிராமங்கள் எத்தனையோ உள்ளன. அப்படிப்பட்ட ஒரு கடலோர கிராமத்தில் மக்கள் மனதை உலுக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார் இயக்குநர்.

சமீபத்தில் இயக்குநர் பொன்ராம் தன்னுடைய அடுத்த படமான ‘எம்.ஜி.ஆர். மகன்’ படத்தின் வெளியீட்டு வேலைகளில் இருந்தபோதிலும் இப்படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு படக் குழுவினரை வெகுவாக பாராட்டி உள்ளார்.

**-இராமானுஜம்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share