சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட மாநாடு படத்தின் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்களே மீதமிருக்கிறது. மாநாடு மாதிரியான காட்சிகளுக்கான மாபெரும் செட் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஏன் ஷூட்டிங் நடக்கவில்லை என்று விசாரித்தால் புதிய தகவல் கிடைத்தது.
சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷனும் எஸ்.ஜே.சூர்யாவும் மற்ற படங்களில் செம பிஸி. தற்பொழுது மாநாடு படத்துக்கு காம்பினேஷன் காட்சிகள் எடுக்க வேண்டியிருக்காம். ஆனால், அமிதாப் உடனான பாலிவுட் படத்துக்கு சென்றுவிட்டார் கல்யாணி. அதுமாதிரி, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் டான் படத்தின் படப்பிடிப்புக்காக கோவை சென்றுவிட்டார் எஸ்.ஜே.சூர்யா. இதனால், காம்பினேஷன் காட்சிகள் எடுக்கமுடியாமல் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மார்ச் 15க்கு மேல் எஸ்.ஜே.சூர்யா தேதி ஒதுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். அந்த நாட்களில் கல்யாணி பிரியதர்ஷனையும் அழைத்துவர பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருக்காம். எப்படியும் , மார்ச் மாதம் முழு படப்பிடிப்பையும் படக்குழு முடித்துவிடும் என்றே தெரிகிறது.
அரசியல் டிராமாவாக உருவாகிவரும் இப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு, பாதியில் தனித்துவிடப்பட்ட ‘பத்து தல’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார் சிம்பு. இந்த வருடம் மஹா, மாநாடு, பத்து தல படங்கள் அடுத்தடுத்து சிம்புவுக்கு வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
**- தீரன்**
�,