நடிகர் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்திலிருந்து முதல் பாடல் இன்று வெளியாகிறது.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய 44 ஆவது படமாக ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். இந்த படத்திலிருந்து முதல் பாடலான ‘தாய்க்கிழவி’ இன்று வெளியாக இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் படத்தில் தனுஷுடன் இயக்குநர் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து படத்தின் ப்ரோமோஷன் கடந்த வாரத்தில் இருந்தே முடுக்கி விடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் ரசிகர்கள் முன்னிலையில் முதல் பாடல் வெளியீட்டு கொண்டாட்டம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் தவிர்த்து அடுத்த மாதம் தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி க்ரேமேன்’ நெட்ஃபிலிக்ஸில் வெளியாகிறது. மேலும், தமிழ் தெலுங்கில் பைலிங்குவலாக உருவாகி வரும் ‘வாத்தி’, செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ ஆகிய படங்களும் தனுஷ் கைவசம் இருக்கிறது.
**ஆதிரா**