மாரி செல்வராஜிடம் மன்னிப்பு கேட்ட உதயநிதி

'மாமன்னன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.
'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்' ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு இயக்குநர் மாரிசெல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
இதனை உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில்,
“'மாமன்னன்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. கடைசி மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு கீர்த்தி சுரேஷ் மேமும், பஹத்தும் நாட்கள் கொடுத்தால் தான் நடக்கும். தயவு செய்து மனது வையுங்கள். நான் கொடுத்த அத்தனை இம்சைகளுக்கும் மாரிசெல்வராஜிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். 'மாமன்னன்' அணிக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
படம் குறித்த அறிவிப்பு வெளிவந்த நாளிலிருந்து உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் என இந்த கூட்டணி வித்தியாசமாக உள்ளதாக ரசிகர்களும் தங்கள் எதிர்ப்பார்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். சமீபத்தில், இந்த படத்தில் நடிகர் வடிவேலுவின் கதாபாத்திரம் குறித்த செய்தி வெளியானது.
இதில் உதயநிதிக்கு வடிவேலு தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவே பெரும்பாலும் அறியப்பட்ட நடிகர் வடிவேலுவுக்கு இந்த படத்தில் அதுபோன்ற கதாபாத்திரம் இல்லை எனவும் படம் முழுக்கவே அவர் சீரியசான கதாபாத்திரத்தில் வருகிறார் எனவும் சொல்லப்படுகிறது.
மேலும், இதில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்கிறார்.
ஆதிரா