நாக சைதன்யா பற்றிய வதந்திகளுக்கு, தான் காரணம் என்று வந்துள்ள செய்திகளுக்கு பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார் நடிகை சமந்தா.
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தனர். இவர்களது பிரிவிற்கு காரணம் சமந்தா தான் என பல வதந்திகள் கிளம்பியது. அது சமந்தாவின் பெயரை கெடுப்பதற்காகவே நாக சைதன்யாவுடைய திட்டம் என சமந்தாவின் பி.ஆர். அணி கூறியதாக செய்திகளும் வெளியானது.
இருவரும் தங்களது பிரிவினை அறிவித்து பல மாதங்கள் கடந்த நிலையில், தற்போது நாக சைதன்யா நடிகை ஷோபிதாவுடன் பழகுவதாகவும் இருவரும் அடிக்கடி வெளியில் செல்வதாகவும் செய்திகள் வெளியாகின. கூடவே, இப்போது நாக சைதன்யா புகழை கெடுப்பதற்காக சமந்தா தரப்பு திட்டமிட்டு செய்வதாகவும் சில தளங்களில் செய்திகள் வெளியாகின.
இது போன்ற ஒரு செய்தியை தான் சமந்தா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘பெண்கள் பற்றிய வதந்திகள் என்றால் அது நிச்சயம் உண்மையாக தான் இருக்கும். அதுவே ஆண்கள் மீதான வதந்தி என்றால் அது நிச்சயம் பெண்ணால் பரப்பட்டிருக்கும் என்ற பொய் தான் காலம் காலமாக இங்கு இருந்து வருகிறது. வளருங்கள்… இதில் சம்மந்தப்பட்ட நாங்கள் இருவருமே தெளிவாக பிரிந்து, எங்கள் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறோம். நீங்களும் இதை விட்டு விடுங்கள்.
உங்கள் வேலைகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வேலை மற்றும் குடும்பத்தை பாருங்கள்’ என கூறியுள்ளார் சமந்தா.
**ஆதிரா**