திரையுலகினரை ஆச்சரியப்பட வைக்கும் 'கேஜிஎஃப் 2'!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பலர் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளிவந்த படம் 'கேஜிஎஃப் 2'.
இந்தப் படம் உலக அளவில் 1200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து இன்றுவரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. பீஸ்ட் படத்துடன் திரையரங்குக்கு வந்த இந்தப் படம் அதற்கு இணையாக, குறைவான திரைகளில் திரையிடப்பட்டு நியாயமான கட்டணத்தில் விற்கப்பட்ட டிக்கெட் மூலம் 1200 கோடி ரூபாய் வசூலைக் கடந்து, தற்போது ஆறாவது வாரத்தில் நுழைந்துள்ளது. சென்னையில் மட்டும் தற்போது தினசரி 30 திரைகளில் 80 காட்சிகள் வரை இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
'கேஜிஎஃப் 2' படத்துக்குப் பிறகு வெளிவந்த சில முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியடைந்துள்ளன. அதன்பின் வந்த சில முக்கிய படங்கள் ஓரிரு வாரங்களில் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டது. தமிழகத்தில் மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, வட இந்திய மாநிலங்கள் என அனைத்து இடங்களிலுமே ஆறாவது வாரத்தில் ஓடுகிறது.
இதன்மூலம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்காது. தியேட்டர்களுக்கு மட்டுமே லாபமாக இருக்கும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை ஆகி விடுவதை கண்டு திரையுலகினர் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்.
இதே போன்று பாகுபலி, காஞ்சனா படங்கள் தமிழகத்தில் ஓடியது. ஆனால், ஒரு கன்னட சினிமா, அதிக பிரபலமில்லாத இயக்குநர், முன்னணியில் இல்லாத கதாநாயகன் நடித்த ஒரு படம் இந்த அளவுக்கு வசூல் சாதனை செய்ததுதான் மிகப் பெரிய சாதனையாகக் கூறப்படுகிறது.
-இராமானுஜம்