‘ஒன்றியத்தின் தப்பாலே' : கமல் படம் மீது புகார்!


கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜூன் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக மே 15 ஆம் தேதி நடக்கும் விழாவில் படத்தின் முன்னோட்டம், இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், கமல்ஹாசன் எழுதிப் பாடியுள்ள பத்தல, பத்தல என்கிற பாடல் நேற்று முன்தினம் மாலை வெளியானது.
சென்னைத் தமிழில் வெளியாகியுள்ள இந்தப் பாடலில்,
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னும் இல்ல இப்பாலே..
என்று மத்திய அரசை விமர்சிக்கும் வரிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தப் பாடல் அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால் இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசன் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடித்து விரைவில் வெளியாக உள்ள விக்ரம் என்ற திரைப்படத்தில் வரும் “பத்தலே பத்தலே” என்ற பாடலில் மத்திய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்துள்ள
“கஜானாலே காசில்லே..
கல்லாலையும் காசில்லே..
காய்ச்சல் ஜூரம் நிறையா வருது…
தில்லாலங்கடி தில்லாலே..
ஒன்றியத்தின் தப்பாலே
ஒன்னும் இல்ல இப்பாலே…
சாவி இப்ப திருடன் கையில
தில்லாலங்கடி தில்லாலே”
என்று வரிகள் அமைந்துள்ளன.
மேலும், ஜாதிய ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையில் அமைந்துள்ள “குள்ள நரி மாமு, கெடுப்பவன் கேமு… குளம் இருந்தும் வலைதளத்துல ஜாதி பேசும் மீமு… ஊசி போடு மாமே வீங்கிடும் பம்-பே” என்ற பாடல் வரிகளை நீக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் இணையதளம் மூலமாக ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜூன் 3ஆம் தேதி வெளிவரக்கூடிய விக்ரம் படத்திற்கு உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுப் படத்தைத் தடை செய்ய மனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-இராமானுஜம்