பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தன் நடனம் குறித்து கேலி செய்தவர்களுக்கு பாவ்னி விளக்கம் கொடுத்துள்ளார்.
புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஐந்து சீசன்களையும் ஓடிடியில் பிக்பாஸ் அல்டிமேட் என ஒரு சீசனையும் முடித்து இருக்கிறது.
இதில் போட்டியாளர்களாக பங்கேற்றவர்களை ஜோடியாக நடன ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து ‘பிக்பாஸ் ஜோடிகள்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கியது விஜய் தொலைக்காட்சி.
அந்த வகையில் முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாவது சீசனின் முதல் எபிசோட் நேற்று இரவு ஒளிபரப்பானது. இதில் சுருதி, தாமரை, அவரது கணவர், சுஜா வருணி, அவரது கணவர், அமீர், பாவ்னி என பலர் பங்கேற்க பிரியங்கா மற்றும் ராஜூ தொகுத்து வழங்குகின்றனர்.
இதில் அமீர் மற்றும் பாவ்னி இருவரும் ஜோடிகளாக உள்ளனர். ரம்யா கிருஷ்ணன் மற்றும் கோரியோகிராஃபர் சதீஷ் ‘பிக்பாஸ் ஜோடிகள்- சீசன்2’க்கு நடுவர்களாக உள்ளனர். இதில் முதல் எபிசோட்டில் தன் நடன அனுபவம் பற்றி பகிர்ந்திருக்கிறார் பாவ்னி.
‘என் மேல் அனைவரும் வைத்திருக்கும் நம்பிக்கைக்கும் அனைவருடைய ஆதரவிற்கும் நன்றி. நடனம் எனக்கு முற்றிலும் புதிதான ஒரு விஷயம். அனைவரும் என் கடின உழைப்பை பாராட்டுவீர்கள் என நம்புகிறேன்.
நடனம் எப்பொழுதுமே எனக்கு சவாலான ஒரு விஷயமாக தான் இருந்திருக்கிறது. அதனால், என்னை நேசிப்பவர்களையும் என்னை சுற்றி இருப்பவர்களையும் இதில் பெருமை படுத்தும் விதமாக நூறு சதவீத உழைப்பை நடனத்தில் கொடுக்க விரும்புகிறேன்.
சிலர் என் நடனத்தை பாராட்டலாம், பலர் இதில் பெரிதாக ஒன்றும் இல்லை என கேலி செய்யலாம். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு கமெண்ட்டும் எனக்கு முக்கியமானது. ஏனெனில் அது ஒன்றுதான் என்னை இன்னும் அதிகமான கடின உழைப்பிற்கு வழிவகுத்து கொடுக்கிறது.
என்னுடைய தயாரிப்பாளர்கள், நடுவர்கள் மற்றும் நடன மாஸ்டர் அமீருக்கும் சிறப்பான நன்றி.
என்னுடைய நடன மாஸ்டர் அமீர் சொன்னது எனக்கு முக்கியமானது. என்னவென்றால், நான் இன்னும் நடனத்தில் கற்று கொள்ள நிறைய இருக்கிறது, அதற்கு முடிவே கிடையாது. இது தான் வாழ்க்கையும் கூட என சொன்னார். இதை எப்போதும் கடைபிடிப்பேன்” என அந்த பதிவில் கூறியிருக்கிறார் பாவ்னி.
**ஆதிரா**