Tநடிகர் சக்கரவர்த்தி காலமானார்!

entertainment

தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் நடிகர் சக்கரவர்த்தி. சிவாஜி கணேசன் நடித்த ரிஷி படத்தின் மூலம் தனது திரையுலகப் பிரவேசத்தைத் துவக்கிய சக்கரவர்த்தி தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் அளவிற்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர்.

ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் சிறிய வேடத்தில் வந்தாலும், நடிப்பு என்பது என்ன என்பதை பிற நட்சத்திரங்கள் அறியும் அளவிற்கு நடித்தவர். ‘முள்ளில்லாத ரோஜா’ வில் முற்றிலும் ஊமையாக நடித்து தனது வாயசைப்பிலும், கண் அசைவிலும் நடிப்பை வெளிக் கொணர்ந்த நட்சத்திரம் சக்கரவர்த்தி.

தூக்கு மேடை படத்தில் பாரதியாராக வேடமேற்று நடித்து, பாரதியாராகவே மாறி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவரது நடிப்பு என்றென்றும் போற்றத் தகுந்தது.

சோனி ஸ்போர்ட்ஸ் சேனலில் பின்னணி குரல் கொடுக்கும் பணியில் இருந்து வந்த இவர், இன்று (ஏப்ரல்23) அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே உயிரிழந்தார். காலையில் மனைவி லலிதா அவரை எழுப்பியபோதுதான் அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. 1970களின் இறுதி தொடங்கி 1980ஆம் வருடம் கடைசி வரை கிட்டத்தட்ட 100 படங்களில் சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் அண்ணன், மகன், நண்பன் என பல்வேறு விதமான குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

ஓரிரு படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். ‛தை பொங்கல்’ என்ற படத்தில் இளையராஜாவின் இசையில் அவர் பாடிய கண் மலர்களின் அழைப்பிதழ் என்ற பாடலில் ராதிகாவுடன் இணைந்து டூயட்டும் ஆடியிருக்கிறார். ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி மும்பையில் குடும்பத்துடன் செட்டிலானார் சக்கரவர்த்தி. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார். அவருக்கு லலிதா என்ற மனைவியும், சசிகுமார், அஜய் குமார் என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்.

**அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *