அட்லி- ஷாருக்கான் கூட்டணியில் உருவாக இருந்த படம் ட்ராப் என செய்திகள் வெளிவந்த நிலையில் ஷாருக்கான் ஒரு ட்வீட் செய்துள்ளார்.
‘ராஜா ராணி’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. ‘மெர்சல்’, ‘தெறி’, ‘பிகில்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். 2019-ல் நடிகர் விஜய்யை மூன்றாவது முறையாக இவர் இயக்கிய ‘பிகில்’ படம் தீபாவளி ரிலீஸாக திரையரங்குகளில் வெளியானது. பின்பு இவரது தயாரிப்பில் ‘அந்தாகாரம்’ வெளியானது.
‘பிகில்’ படத்திற்கு பின்பு அவரது அடுத்த படம் குறித்தான அறிவிப்புக்கு காத்திருந்த போது அடுத்து இவர் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமாக உள்ளதாக தகவல் வந்தது. மேலும் கதாநாயகனாக ஷாருக்கான் நடிக்கிறார் எனவும் கதாநாயகி நயன்தாரா எனவும் பேசப்பட்டது.
ஆனால், படம் தொடங்க தாமதமான நிலையில் படம் கைவிடப்பட்டது எனவும் இதனால் அட்லி மீண்டும் கோலிவுட் பக்கமே படம் இயக்க வருகிறார் எனவும் சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அட்லி தரப்பு எதுவும் சொல்லவில்லை.
இப்பொழுது ஷாருக்கான தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்துள்ளார். நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் தமிழ் ட்ரைய்லர் கடந்த சனிக்கிழமை அன்று வெளியானது. இதனையடுத்து இன்று இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் வெளியானது. இந்த ட்ரைய்லரை பார்த்து தான் ஷாருக்கான் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் அவர், ‘நடிகர் விஜய்யின் என்னை போன்ற தீவிர ரசிகரான அட்லியுடன் அமர்ந்து ட்ரைய்லரை பார்த்தேன். ட்ரைய்லரில் சொல்லப்பட்டது போல ‘பீஸ்ட்’ படம் நிச்சயம் ‘Meaner Leaner Stronger’ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்’ என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அட்லீ- ஷாருக்கான் படம் ட்ராப் ஆகவில்லை என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
**ஆதிரா**