Aசெல்ஃபி : சிறப்பு பார்வை!

entertainment

தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை என சொல்லக்கூடிய திரைக்கதை என்பதற்காகவே செல்ஃபி படத்தை இயக்கியுள்ள அறிமுக இயக்குநர் மதிமாறனை பாராட்டலாம்.

தொழில் செய்யப்போகிறேன் அதற்கு என்ன தேவையோ அதுக்கு தகுந்தாற்போல்
படிச்சுக்குறேன் பொறியியல் கல்வி வேண்டாம்’ என்று சொல்லும் கனல்அரசன் (ஜி.வி பிரகாஷ்) அப்பாவின் நிர்பந்தத்தால் விருப்பம் இல்லாத என்ஜினியரிங் படிப்புக்கு, 2 லட்சம் ரூபாய் நன்கொடைகொடுத்து சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் சேர்க்கப்படுகிறார் ஜி.வி பிரகாஷ்.

அவர் சேர்ந்த கல்லூரி தகுதியே இல்லாத ஒன்று. மாணவர் சேர்க்கைக்காக ஆள்பிடிக்கிறார்கள் என்று அங்கு சேர்ந்தபிறகுதான் தெரிகிறது.

ஏமாந்த பணத்தை மீட்பதற்காக நண்பர்களுடன் சேர்ந்து மாணவர் சேர்க்கைக்காக ஏஜெண்ட்டாய் மாறி, பெற்றோர்களிடம் பேசி ஆள் பிடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் அவரைப் போன்றே தனியார் மருத்துவக் கல்லூரியில் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டிற்கு பசையுள்ள பார்ட்டிகளை பிடித்து பணம் சம்பாதிக்கும் ஏஜெண்ட் ரவி வர்மாவாக இயக்குநர் கெளதம் மேனன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கந்துவட்டிக்காரர் ஒருவரின் மகனுக்கு மருத்துவ சீட் வாங்கித் தருவதாக கெளதம் மேனன் குழுவினருக்குத் தெரியாமல் அவர்கள் வழக்கமாக வாங்கும் தொகையைவிட அதிக பணம் பெற்றுக்கொண்டு சீட் பிடித்துக்கொடுக்கிறார் ஜி.வி பிரகாஷ். ஆனால், அது விபரீதத்தில் முடிய ஜி.வி பிரகாஷுக்கும் அவரது நண்பர்களுக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. அந்த நெருக்கடியால் ஏற்படும் பிரச்சனை, விபரீத முடிவு, மருத்துவப் படிப்பிற்காக பெற்றோர்களிடம் கொள்ளையடிக்கும் கல்வி நிறுவனங்கள், ஏஜெண்டுகள் என்ன ஆனார்கள் என்பதை சமரசம் இன்றி பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளே நடித்துக் கொண்டிருந்த ஜி.வி பிரகாஷின் பேச்சு கிராமப்புற மாணவர்களுக்கே உரிய பேச்சாக, யதார்த்தமாக உள்ளது. ஜி.வி பிரகாஷின் கதாப்பாத்திரத்துக்கு இணையாக வில்லனாக வரும் கெளதம் மேனனின் பேச்சுமொழியும், உடல்மொழியும் மிரட்டுகிறது.

புரோக்கர் எந்த இடத்தில் பணத்தை திருப்பிக் கொடுக்கவேண்டும், எந்த இடத்தில் சண்டை செய்யவேண்டும், எந்த இடத்தில் சமாதானம் ஆகவேண்டும் என்பதை கௌதம்மேனன் கதாபாத்திரம் மூலம் நேர்த்தியாக பதிவு செய்து அதகளப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார் கெளதம் மேனன்.

ஜி.வி பிரகாஷ், வாகை சந்திர சேகர், வர்ஷா பொல்லம்மா, சங்கிலி முருகன், தங்கதுரை, குணாநிதி என பலர் இருந்தாலும் செல்ஃபி படம் முழுக்க ஆதிக்கம் செலுத்துவது என்னவோ கெளதம் மேனனின் நடிப்புதான். சேர்மன் சங்கிலி முருகனிடம் அடக்கம் காட்டுவதாகட்டும் அவரது மருமகனை அதட்டுவதாகட்டும் பணத்தைக் கொடுத்து ஏமாந்த பெற்றோரை மென்மையாக கையாளுவதாகட்டும் காட்சிக்கு காட்சி சிறந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார் கௌதம்மேனன்.

நாயகி வர்ஷா பொல்லம்மா, இப்படத்தில் செஃல்பி ஸ்டிக் போலத்தான். கதைக்குள் நாயகியாக இல்லை அவரது கதாபாத்திரம். வழக்கம்போல காதல், அட்வைஸ், ரொமான்ஸ்.. அவ்வளவுதான்.
படித்து முடித்து வேலைக்குப் போய், படிப்பிற்காக வாங்கிய கடனை அடைப்பான் என கனவுகளோடு காத்திருக்கும் அப்பாவாக வாகை சந்திரசேகர்.

ஜி.வி பிரகாஷின் பின்னணி இசை கதையோடே பயணித்து பார்வையாளனை கதிகலங்க வைக்கிறது. விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவு மட்டுமல்ல, வித்தியாசமான சண்டைக் காட்சிகளும் மிரட்டியிருக்கிறது.

எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தர்றேன். பிள்ளைக்கு சீட் வேணும்’ என்று புரோக்கர்களிடம் பணத்தை கொட்டிக்கொடுக்கும் எல்லா பெற்றோரும் அப்பாவிகள் இல்லை என்பதையும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். கல்லூரி சேர்மன், சேர்மனின் மருமகன், சீட் வாங்கிகொடுக்கும் புரோக்கர், அதற்கு எதிராக சீட் வாங்கிக்கொடுக்கும் கல்லூரி மாணவர்கள் என கதையில் யாருக்கும் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்று கதையை நகர்த்தியிருப்பதுதான் படத்தின் பலம்.

படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் இயல்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
கல்லூரிகளில் சேர்க்கும்போது பெற்றோர்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும், என்ன நடக்கிறது, என்று சாட்டையை சுழற்றி பாடம் எடுக்காமல், படமாக மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது.

பொறியியல் மாணவர்களின் வாழ்க்கைக்கு பின்னால் இருக்கும் பயமுறுத்தும் உண்மைகளை இப்படத்தில் வெளிச்சம்போட்டு காண்பித்திருக்கிறார் இயக்குநர். சம்பளத்தை மிகவும் குறைவாக கொடுத்து, கல்லூரி பேராசிரியர்களைக்கூட சீட் பிடிக்கும் தரகர்களாக மாற்றிவைத்திருக்கின்றன சுயநிதி கல்லூரிகள் என்ற உண்மை எல்லோருக்கும் தெரியும் என்றாலும் அதனை திரையில் பதிவு செய்து ஆவணமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

நீட் நீட்ன்னு உயிரை எடுக்கிறாங்களே என்ன அது? நீட்லாம் தடுக்க முடியாது. நீட்டால எம்.பி.பி.எஸ் படிக்க முடியாமப் போய்டுவாங்க. அதுல காலியாகும் இடங்களை வச்சி நாம எப்படி காசு பாக்குறோம் என்பதுதான் முக்கியம் என்று – பொறியியல் கல்லூரிகளில் நடக்கும் நன்கொடைகளை மையப்படுத்திய கதையில் ‘நீட்’ தேர்வு குறித்தும் அரசியல் பேசி செல்கிறது திரைக்கதை. இதுவரை தமிழ்சினிமாவில் எந்த ஒரு இயக்குநரும் தொடாத ஒருவரிக் கதை அதனை சொல்லுவதில் தடுமாற்றம் இருந்ததால் படமும் வசூல் ரீதியாக தடுமாறுகிறது

தயாரிப்பு: டிஜி பிலிம் கம்பெனி
இயக்கம் : மதிமாறன்
இசை – ஜிவி பிரகாஷ்குமார்
நடிப்பு: ஜிவி பிரகாஷ்குமார், வர்ஷா பொல்லம்மா, கௌதம் மேனன், வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கத்துரை, குணாநிதி

**-இராமானுஜம்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *