பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 208 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மும்பையில் மார்ச் 26 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (மார்ச் 27) இரவு 7.30 மணிக்கு இரண்டாவதாக நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் விளையாடியது.
அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டு பிளெஸ்சிஸும், அனுஜ் ராவத்தும் களமிறங்கினர். அனுஜ் ராவத் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து டு பிளெஸ்சிஸுடன் விராட் கோலி கைகோத்தார். இருவரும் பஞ்சாப் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக டு பிளெஸ்சிஸ் அதிரடியாக ஆடினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டு பிளெஸ்சிஸ், 88 ரன்களில் (57 பந்து, 3 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழந்தார்.
ஆட்டத்தின் கடைசியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக்கும் தன் பங்குக்கு 3 சிக்சர்களை பறக்கவிட்டார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. விராட் கோலியும் (41), தினேஷ் கார்த்திக்கும் (32) ஆட்டமிழக்காமல் கடைசிவரை களத்தில் இருந்தனர்.
இதைத் தொடர்ந்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது. பஞ்சாப் அணியில் முதலில் களமிறங்கிய மயங்க் அகர்வால் 32 ரன்களும் தவான் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய பனுகா ராஜபக்ச 43 ரன்கள் எடுத்து விக்கெட்டைப் பறி கொடுத்தார்.
அதிரடியாக ஆடிய ஓடின் ஸ்மித் 8 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் பஞ்சாப் அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்த பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
இன்று (மார்ச் 28) இரவு நடக்கும் நான்காவது லீக் ஆட்டத்தில் இந்த ஆண்டின் புதிய அணிகளான குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.
**-ராஜ்**
.