கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஐபிஎல் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 26) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் (இந்தியன் பிரிமீயர் லீக்) டி20 கிரிக்கெட் போட்டி 2008ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 14 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நான்கு தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இரண்டு முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் 15ஆவது ஐபிஎல். திருவிழா இன்று (மார்ச் 26ஆம் தேதி) தொடங்குகிறது. மே 29-ந் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன.
கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் லீக் ஆட்டங்கள் அனைத்தும் மராட்டிய மாநிலத்தில் மும்பையில் உள்ள வான்கடே , பிராபோர்ன் ஸ்டேடியங்கள், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல், புனேயில் உள்ள எம்சிஏ ஆகிய நான்கு மைதானங்களில் போட்டி நடக்கிறது.
இந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் இரண்டு புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதனால் 2011 ஆண்டு போட்டியை போல இந்த ஐபிஎல் தொடரில் 10 அணிகள் விளையாடுகின்றன.
10 அணிகள் கலந்து கொள்வதால் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு அணியும் 14 ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த மாற்றமும் இல்லை. 10 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் – ஏ: மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.
குரூப் – பி: சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் இரண்டு தடவையும் மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.
மே 22ஆம் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று ஆட்ட விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இறுதிப்போட்டி மே 29ஆம் தேதி நடைபெறும்.
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 26) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
**-ராஜ்**
.