ஹாஸ்பிட்டலில் ஐஸ்வர்யா: தனுஷ் போட்ட பதிவு!


நடிகர் ரஜினிகாந்தின் மகளும் இயக்குநருமான ஐஸ்வர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு கோவிட் காரணமாக பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதில் இருந்து குணமாகி வந்தார். இந்த நிலையில் மறுபடியும் அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது, “வாழ்க்கை கோவிடுக்கு முன், பின் என மாறியுள்ளது. இப்பொழுது கடுமையான காய்ச்சல், தலை சுற்றல் மற்றும் உடல் சோர்வு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் எப்பொழுது நீங்கள் உங்களை மோட்டிவேட் செய்து இன்ஸ்பையர் செய்ய கூடிய அழகான மருத்துவரை சந்திக்கிறீர்களோ, அவர்களுக்கும் உங்களுடன் செலவிட நேரம் இருக்கிறதோ, அப்பொழுது இந்த கவலை எல்லாம் உங்களுக்கு தேவைபடாது. மகளிர் தினத்தை தொடங்குவதற்கு இதை விட நல்ல வழி வேறு எதுவாக இருக்கும்? உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி மேடம்” என மருத்துவரை டேக் செய்து நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார்.
ஐஸ்வர்யாவின் இந்த பதிவுக்கு ராதிகா சரத்குமார், விஜே அர்ச்சனா, திவ்யா சத்யராஜ், கீதாஞ்சலி செல்வராகவன் மற்றும் ரசிகர்கள் என பலரும் சீக்கிரம் ஐஸ்வர்யா குணமாக வேண்டும் என தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நாளை இவர் இயக்கிய 'முசாஃபிர்' என்ற இசை ஆல்பம் வெளியாக இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
தனுஷின் 'மாறன்' திரைப்படம் இந்த மாதம் 11ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இது தவிர செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் தற்போது தனுஷ் நடித்து வருகிறார்.
ஒரு பக்கம் ஐஸ்வர்யா இப்படி பதிவிட, மற்றொரு பக்கம் தனுஷ் தன்னுடைய செல்ல நாய்க்குட்டிகளுடன் மறுபடியும் ரீயூனியன் என பள்ளி மாணவன் கெட்டப்பில் இருக்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
ஆதிரா