டி20: இந்தியாவின் புதிய சாதனை!


இந்திய அணி நேற்று (பிப்ரவரி 27) இலங்கையுடன் மோதிய கடைசி டி20 போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா தொடர்ச்சியாக 12ஆவது வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேற்று (பிப்ரவரி 27) இரவு 7 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சனகா 74 ரன்கள் குவித்தார். சண்டிமல் 22 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, இரண்டாவது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்தது. கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் சஞ்சு சாம்சன் (18 ரன்கள்), தீபக் ஹூடா (21 ரன்கள்), வெங்கடேஷ் அய்யர் (5 ரன்கள்) ஆகியோரும் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதேசமயம் மறுமுனையில் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் அய்யர் அரை சதம் கடந்தார். அவருடன் ஜடேஜா தனது பங்களிப்பை வழங்க, இந்தியா 19 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் 9 பவுண்டரி 1 ஒரு சிக்சருடன் 73 ரன்கள் (நாட் அவுட்), ஜடேஜா 15 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 22 ரன்கள் (நாட் அவுட்) சேர்த்தனர்.
16.5 ஓவர்களில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இதனால் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமிபியா ஆகிய அணிகளை தோற்கடித்த இந்தியா, அதன் பிறகு நியூசிலாந்து (3-0), வெஸ்ட் இண்டீஸ் (3-0) இலங்கை (3-0) அணிக்கு எதிரான டி20 தொடர்களிலும் வாகை சூடியது.
இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக ஆட்டங்களில் வென்ற ஆப்கானிஸ்தான், ருமேனியா (தொடர்ந்து தலா 12 வெற்றி) அணிகளின் சாதனையை இந்தியா சமன் செய்து புதிய சாதனை படைத்துள்ளது.
-ராஜ்