சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் நீண்டகால பிரார்த்தனை வலிமை படத்தை
‘வெளியிடுங்கப்பா… எங்களால் முடியல’ என்பதுதான்.
இதற்கு காரணம் அஜீத்குமார் ரசிகர்கள் அஜீத்குமார் புகைப்படம் அல்லது டிரைலர் இவற்றை வைத்து படத்தை புரமோட் செய்கின்ற வேலைகளை செய்து வந்தனர். இதனால் வேறு செய்திகள், தகவல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன. ஒரு கட்டத்தில் எவ்வளவு நாளைக்குத்தான் அரைச்ச மாவையே அரைக்க போறீங்க என்கிற விமர்சனங்களும் எழுந்தன.
இந்த சூழ்நிலையில், ஒரு வழியாக பிப்ரவரி 24 அன்று வலிமை வெளியீடு உறுதியாகி உள்ளது
அஜீத்குமார் ரசிகர்கள், சினிமா ரசிகர்கள், வலிமையில் என்னதான் இருக்கிறது என்பதை பார்க்கும் ஆவலில் இருக்கிறார்கள். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பதட்டத்திலும், பயத்திலும் இருக்கிறார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில்.
அதாவது, ’நேர்கொண்ட பார்வை’ முடிந்து 2019ல் தொடங்கப்பட்ட வலிமை கொரோனா தொற்று, பொது முடக்கம் காரணமாக தாமதமானது. ஆனால் அதற்கு பின் தொடங்கப்பட்ட பல படங்கள் வெளியாகிவிட்டது. ஆனால் வலிமை ரிலீஸ் தாமதமானதால் அந்தப் படத்தின் மீதான ஆர்வம் பொதுவெளியில் குறைந்து கொண்டே போகிறது.
அஜித்குமார் ரசிகர்கள் மட்டும் பார்த்தால் போதாது, வெகுஜன பார்வையாளர்கள் தியேட்டருக்கு திரளாக வர வேண்டும். அப்போதுதான் தற்போதைய நிலையில் படத்தின் பட்ஜெட் அளவு வசூல் ஆகும். இரண்டு வருடங்களாக படத்தின் மூலதனத்திற்கான வட்டி இவையெல்லாம் சேருகிற போது படத்தின் வியாபாரத்திற்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது. அவற்றையெல்லாம் ஈடுகட்ட வேண்டும் என்றால், அதற்கு மிக பெரிய அளவில் விளம்பரம் தேவை. அதனை இதுவரையிலும் தயாரிப்பு தரப்பால் பட்ஜெட் ஒதுக்கீடு செய்து தொடங்க முடியவில்லை.
படம் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் படம் சம்பந்தமான தகவல்கள், புகைப்படங்களுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றுகூட நடத்தப்படவில்லை. இவற்றையெல்லாம் யோசித்து பார்த்த தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர், அஜித்குமாரிடம் வலிமை ரிலீஸ் குறித்து சில நொடிகள் பேசக்கூடிய வீடியோ ஒன்றை பேசித் தருமாறு கேட்டிருக்கிறார்.
ஆனால் அஜித்குமார் தனது வழக்கமான கொள்கைகளின் படி முடியாது என்று மறுத்துவிட்டாராம். ‘பிடிச்சவங்க பார்க்கட்டும், பிடிக்கலைன்னா பார்க்க வேண்டாம்.’ என்று பழைய வசனத்தை போனி கபூரிடம் பேசியிருக்கிறார் அஜித்குமார்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார் போனிகபூர். படத்தின் வெளியீடு தாமதமானதால் அஜித்குமாருக்கு எந்த இழப்புமில்லை. ஆனால் போனிகபூருக்கு தினம் கடன் சுமை உயர்ந்து கொண்டே போகிறது. அஜித்குமாரைகாட்டிலும் அதிகம் சம்பளம் வாங்க கூடிய பிரபாஸ், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்கள் தாங்கள் நடித்த படத்தின் வெற்றிக்காக இந்தியா முழுவதும் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு செல்கின்றனர்.
ஆனால் தயாரிப்பாளர் சிரமத்தை புரிந்துகொண்டு அஜித்குமார் உதவி செய்ய தயாராக இல்லை. இதன் காரணமாகவே வேறு வழியின்றி இந்தி நடிகையும், தன் மகளுமான ஜான்வி கபூரை தனது இன்ஸ்டாவின் மூலம் வலிமையை பிரபலப்படுத்த வீடியோ வெளியிட ஏற்பாடு செய்துள்ளார்.
இத்தனை முரண்பாடுகள் இருந்தபோதிலும் அஜித்குமார் அடுத்து நடிக்க போகும் படத்தையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார். தனக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் வலிமை மூலம் எனக்கு வலிதான் ஏற்படுகிறது என புலம்புகிறாராம்.
வலிமை படத்தின் வியாபாரம் 300 கோடி என இணையதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறதும் அது உண்மை இல்லை என்பதை கூறியும் புலம்பியுள்ளார் போனி கபூர். வலிமை படம் தமிழ்நாடு திரையரங்க உரிமை 62 கோடி ரூபாய்க்கும், வெளிநாட்டு விநியோக உரிமை 18 கோடிக்கும், தொலைக்காட்சி, ஓடிடி உரிமை 60 கோடிக்கும், கேரளா, கர்நாடகா, வட இந்திய உரிமைகள் சுமார் 20 கோடி வரை வியாபாரமாகி உள்ளது.
ஆகமொத்தம் வலிமை பட வியாபாரம் மூலம் தயாரிப்பாளருக்கு அதிகபட்சமாக ரூபாய் 180 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. படத்தின் பட்ஜெட்டும் அதே அளவு ஆகியுள்ளது. இதன் காரணமாக படத்திற்கான வரவேற்பு, தியேட்டருக்கு மக்கள் வருகையை பொறுத்தே வலிமை படத்திற்கான வசூலை எதிர்பார்க்க முடியும் என்பதே தற்போதைய நிலைமை. அதனால்தான் போனி கபூர் புலம்ப தொடங்கியுள்ளார் என்கின்றனர் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில்.
**-இராமானுஜம்**