சாய்னாவிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த்

entertainment

கடந்த 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஃபெரோஸ்ர் நகருக்குச் சென்றபோது விவசாயிகளின் போராட்டத்தால் மீண்டும் டெல்லி திரும்பினார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

“எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்” என்று தனது ட்வீட்டில் சாய்னா தெரிவித்திருந்தார். சாய்னாவின் இந்தப் பதிவை டேக் செய்து நடிகர் சித்தார்த், இறகுப்பந்து உலகின் சாம்பியன். கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்த பதிவை ஆபாசமான வார்த்தைகளால் அவரின் ட்விட்டர் பதிவில் தெரிவித்ததை அடுத்து கண்டனங்கள் எழுந்தன.

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தொடங்கி சிவசேனா ராஜ்யசபா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி, தமிழ் சினிமாவின் சின்மயி, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா போன்ற பலர் நடிகர் சித்தார்த்துக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

சித்தார்த் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் மும்பை காவல் நிலையத்துக்கு பரிந்துரை செய்தது.தற்போது இந்த விவகாரத்தில் சித்தார்த்துக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார். தன்னுடைய பதிவில், இந்தியாவை விளையாட்டு சக்தியாக மாற்றுவதில் சாய்னாவின் சிறந்த பங்களிப்புகளுக்காக இந்தியா பெருமை கொள்கிறது. சாய்னா ஒரு தேசபக்தர், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்பதைத் தவிர, அவரைப் போன்ற ஓர் ஆளுமையைப் பற்றி மலிவான கருத்தைச் சொல்வது என்பது ஒரு நபரின் இழிவான மனநிலையை சித்தரிக்கிறது” என்று சித்தார்த்துக்கு எதிராக பேசியுள்ளார். இதேபோல் நடிகை குஷ்புவும், சித்தார்த் பேச்சு மிகவும் மோசமானது. ஒரு தனிநபரிடம் உங்கள் வெறுப்பை வெளிப்படுத்தாதீர்கள் நண்பரே என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில்,” சில நாட்களுக்கு முன்பு உங்கள் ட்வீட் ஒன்றிற்கு நான் அளித்த மூர்க்கத்தனமான நகைச்சுவைக்காக (rude joke) நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் பல விஷயங்களில் உங்களுடன் உடன்படாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் ட்வீட்டைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் அல்லது கோபம் கூட எனது தொனியையும் வார்த்தைகளையும் நியாயப்படுத்த முடியாது. என்னால் அதை விடச் சிறப்பாகப் பேச முடியும் என்பதை நான் அறிவேன். எந்தவொரு ஜோக்கையும் விளக்க வேண்டும் என்றால், அது ஒரு நல்ல ஜோக் இல்லை என்ற சொற்றொடர் உள்ளது. எனவே, அந்த ஜோக்கிற்கு என்னை மன்னிக்கவும். நீங்கள் எப்போதும் சாம்பியன்.

இருப்பினும், எனது ட்வீட் வார்த்தை விளையாட்டு மற்றும் நகைச்சுவையானது மட்டுமே. அதற்கு அனைத்து தரப்பினரும் கூறும் வகையிலான உள்நோக்கம் எதுவும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் கூறிக்கொள்கிறேன். நான் எப்போதும் பெண்ணியவாதிகள் பக்கம் இருப்பவன். ஒரு பெண்ணாக உங்களைத் தாக்கும் நோக்கம் நிச்சயமாக எனக்கு இல்லை என்றும் நான் உறுதியளிக்கிறேன். எனவே, இத்துடன் இந்த விஷயத்தை நாம் விட்டுவிடலாம் என நம்புகிறேன். நீங்கள் எனது கடிதத்தை ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன். நீங்கள் எப்போதும் என் சாம்பியனாக இருப்பீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

**அம்பலவாணன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *