இந்தியாவுக்கு 8 விக்கெட்டுகளும் தென்னாப்பிரிக்காவுக்கு 122 ரன்களும் தேவை என்கிற நிலையில் நேற்று (ஜனவரி 6) தொடங்கிய இரண்டாவது டெஸ்டின் நான்காவது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிக்கு தேவையான 122 ரன்களை எடுத்து ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி ஒரே ஒரு விக்கெட் எடுத்து வெற்றியைத் தவறவிட்டது.
இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு தென்னாப்பிரிக்கா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்று முன்தினம் (ஜனவரி 5) நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்தது.
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் வெற்றியைத் தீர்மானிக்க இந்தியாவுக்கு 8 விக்கெட்டுகளும் தென்னாப்பிரிக்காவுக்கு 122 ரன்களும் தேவை என்கிற நிலையில் நேற்று (ஜனவரி 6) மழையால் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம் தடைப்பட்டது.
பின்னர் இரவு 7 மணிக்குத் தொடங்கிய ஆட்டத்தில் இந்தியா ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியது. 243 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் டெஸ்ட் தொடர் சம நிலையை அடைந்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு இதே வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 241 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிட்டத்தக்கது.
மூன்றாவது டெஸ்ட் 11ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த போட்டியில் இடம்பெறாத விராட் கோலி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
**-ராஜ்**
.�,