2022 தொடக்கத்தில் இந்தியாவின் பிரம்மாண்ட படைப்பாக 7ம் தேதி ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் அஜய்தேவ்கான், ஆலியா பட், சமுத்திரகனிஉள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆர் ஆர் ஆர் படம் வெளியாவதாக இருந்தது. திரையரங்குகள் கல்லாகட்டும் கனவுகளுடன் படக்குழுவினர் காத்திருந்தனர்.
ஆனால், பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்படுகின்றன 50% இருக்கை அனுமதி என்கிற நிபந்தனைகள் நடைமுறைக்கு வருவதால் அப்படத்தின் வெளியீட்டு தேதியை குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இதனால், ஜனவரி 13 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அஜித்தின் வலிமை திரைப்படத்துக்கு அண்ணாத்தே போன்று அதிகமான திரையரங்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விஷால் நடிப்பில் தயாராகியிருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்கிற தகவல் கசிய தொடங்கியுள்ளது .
விஷாலின் இந்தத் திடீர் முடிவுக்குக் காரணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. என்ன காரணம்? தமிழ்நாட்டில் ஜனவரி 10 ஆம்தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின்படி திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
ஜனவரி 10 ஆம் தேதிக்குப் பிறகு இதில் மாற்றம் வருமென்கிற அரசு வட்டார தகவல் விஷாலுக்கு அவரது நட்பு வட்டம் மூலம் தெரியவந்திருக்கிறது. அந்த மாற்றம் என்னவென்றால்? ஜனவரி 10 க்குப் பிறகு இரவு 10 மணி முதல் காலை ஐந்து மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருமென்று கூறப்படுகிறது.
அப்படி வந்தால், திரையரங்குகளில் மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட முடியும். அதனால் வலிமை வசூல் குறையும் அது படத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வலிமையையும் தள்ளிவைக்கும் எண்ணம் இருக்கிறதாம். அப்படி நடக்கும் பட்சத்தில் விஷால் படத்தை வெளியிடலாம் என்று நினைக்கிறார்களாம்.
அதிக திரையரங்குகளில் மூன்று காட்சிகளில் வெளியானால்கூடப் போதும் என்று விஷால் முடிவு செய்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். வலிமை திட்டமிட்டபடி வெளியாகும் என கூறினாலும் இதுசம்பந்தமான சாதக பாதகங்களை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுடன் விவாதித்து முடிவு எடுக்க படத்தின் தயாரிப்பாளர் இன்று காலை சென்னை வந்துள்ளார்.
வலிமை, வீரமே வாகை சூடும் என இரண்டு படங்களும் வந்தாலும் தேவையான திரைகள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது .
**-இராமானுஜம்**
�,