ஜனவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருந்த ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படம் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது.
பாகுபலி படத்தைத் தொடர்ந்து ராஜமெளலிக்கு பெரியளவில் வரவேற்பும், எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே உள்ளது. இவரின் அடுத்த பிரம்மாண்டமாக நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் தெலுங்கு மொழி உள்பட ஐந்து தென்னக மொழிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வருகிற ஜனவரி 7ஆம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
இதற்கிடையில் ஒமிக்ரான் பரவல் காரணமாக வடமாநிலங்களில் தியேட்டர்களில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று தமிழ்நாட்டிலும் இந்த கட்டுப்பாடு இன்று முதல்நடைமுறைக்கு வந்துள்ளது. இப்படி அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தை வெளியிட்டால், வசூலில் பாதிப்பு ஏற்படும் என்பதால், படத்தை தள்ளி வைப்பதற்கான ஆலோசனையில் படக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களையும் மனதில் வைத்து, எங்கள் படத்தைத் தள்ளிவைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நாம் எவ்வளவோ முயற்சி செய்தாலும், சில சூழ்நிலைகள் நாம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை. இந்தியாவில் பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடி வருவதால், படத்தின் மீதான உங்கள் எதிர்பார்ப்பை தக்க வைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்பதை தவிர வேறு வழி இல்லை. இந்திய சினிமாவின் சிறந்த படைப்பை சரியான நேரத்தில் மீண்டும் உங்களுக்கு கொண்டு வருவோம் என்று உறுதி அளிக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
**-வினிதா**
�,