சினிமா திரைக்கதை திட்டமிட்டு எழுதப்படுவதால் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும் வண்ணம் காட்சிகள் இருக்கும். அதேபோன்றுதான் சினிமாவில் சில முடிவுகள், வெற்றி – தோல்விகள் சில நொடிகளில் நடந்துவிடுகிறது.
1994 ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு அன்று இளையராஜா இசையில் ரஜினிகாந்த் நடித்த வீரா படம் வெளியானது. அதன் பின்னர் இருவரும் இணையவில்லை. 27 வருடங்கள் கழித்து அந்த அதிசயம் நிகழ்வதற்கான சூழல் உருவாகியுள்ளதாக தமிழ் சினிமா வட்டாரத்திலும், இணையதளங்களிலும் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து, மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியானது. அண்ணாத்த படம் எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டவில்லை என்பதால் அவரது சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் கோரிக்கை வைக்க, அதையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்று கூறப்பட்டது. இருந்தபோதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
இளையராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் எம்.எம்.பிரிவியூ திரையரங்கை விலைக்கு வாங்கி ஒலிப்பதிவுக் கூடமாக மறு நிர்மாணம் செய்தார். சினிமா பிரபலங்கள் பலரும் ஒலிப்பதிவு கூடத்துக்குச் சென்று இளையராஜாவை வாழ்த்தினார்கள். அப்படி சென்றவர்களில் நடிகர் ரஜினிகாந்த்தும் ஒருவர். அப்போது அது சம்பிரதாயமான சந்திப்பு என பார்க்கப்பட்டது. தற்போது இளையராஜாவின் பாவலர் கிரியேஷன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது
இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ‘சீனி கம்’, ‘பா’ மற்றும் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களை இயக்கிய பால்கி, தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். அவர், ரஜினிகாந்தை வைத்து ஒரு இந்தியப் படம் எடுக்கவிருக்கிறார் என்றும் அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது. தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய தகவல் மட்டும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் அதற்கு விடை கிடைக்கும் வகையில் பால்கி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பது உண்மைதான் என்றும் அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பது மட்டுமின்றி, படத்தைத் தயாரிப்பதே இளையராஜாதான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் படம் தோல்வியடைந்தபோது அதில் இருந்து பாரதிராஜாவை மீட்டெடுக்க 1981ஆம் ஆண்டு பாவலர் கிரியேஷன் நிறுவனத்தைத் தொடங்கி அலைகள் ஓய்வதில்லை படத்தை தயாரித்தார் இளையராஜா. அதைத் தொடர்ந்து பல படங்கள் இந்த பேனரில் தயாரிக்கப்பட்டாலும் வணிகரீதியாக லாபகரமாக இல்லை என்பதால் படத் தயாரிப்பை இளையராஜா தொடரவில்லை. இப்போது மீண்டும் படம் தயாரிக்கவிருப்பதாகவும் அதில் ரஜினிகாந்த் நடிக்க வேண்டுமென்றும் இளையராஜா கேட்க, அதற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இதனால் இளையராஜாவுக்கும் ரஜினிகாந்த்துக்கும் இணக்கமான பால்கி உள்ளே வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
**-இராமானுஜம்**
.�,