விரைவில் நடிகராக… ‘ஊ சொல்றியா’ தேவி ஸ்ரீ பிரசாத்

entertainment

‘புஷ்பா – தி ரைஸ்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பலராலும் வெகுவாகப் பாராட்டப்படுவது இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

முட்டம்செட்டி மீடியாவுடன் இணைந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கிய இந்தப் படம் டிசம்பர் 17 அன்று பல மொழிகளில் வெளியானது. வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ள இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தனது திரையுலகப் பயணத்தில் அடுத்தகட்ட நகர்வுக்காக பத்திரிகையாளர்களிடம் மனம் திறந்த தேவி ஸ்ரீ பிரசாத், படத்தின் இசை மற்றும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பேசினார்.

**ஐந்து மொழிகளிலும் புஷ்பாவின் பாடல்கள் வெற்றிபெற்றுள்ளன. எப்படி உணர்கிறீர்கள்?**

உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். எடுத்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. படத்தின் ஒவ்வொரு பாடலையும் முடிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. குறிப்பிட்ட மொழிக்கு ஏற்ற பாடகர்களை கவனமாகத் தேர்வு செய்தேன். ‘ஊ சொல்றியா’ பாடலைத் தமிழில் பாடிய ஆண்ட்ரியா படப்பிடிப்பில் பிஸியாக இருந்தபோதிலும் அனுமதி பெற்று வந்து பாடிக் கொடுத்தார். கவிஞர் விவேகா பாடல் வரிகளைச் சிறப்பாக வடிவமைத்தார்.

‘ஸ்ரீவள்ளி’ பாடலைப் பாடுவதில் சித் ஸ்ரீராம் மிகுந்த ஆர்வம்காட்டினார். இது டப்பிங் படம் அல்ல; அகில இந்திய படம் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். அதற்குண்டான தரம் இருக்க வேண்டும் என்று விரும்பினோம். முழு ஒத்துழைப்பு அளித்த அனைத்து பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு எனது நன்றி

**வெற்றியை எப்படிக் கையாளுகிறீர்கள்?**

“வெற்றியோ தோல்வியோ எப்போதும் நான் அதை என் இதயத்திற்கு மட்டுமே எடுத்து செல்வேன், தலைக்கு அல்ல. எல்லாப் பாடல்களுக்கும் ஒரே மாதிரியான உழைப்பை அளிக்கிறோம். சில பாடல்கள் ஹிட் ஆகின்றன, சில பாடல்கள் ஹிட் ஆவதில்லை. இரண்டுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். உண்மையாகவும் கடுமையாகவும் உழைப்பது மட்டுமே நமது கைகளில் உள்ளது”

**சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுனுடனான உங்களின் கெமிஸ்ட்ரி பற்றி…**

“அல்லு அர்ஜுனும் நானும் நெருங்கிய நண்பர்கள். அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ள நடிகர். அவரது வெற்றியை நான் கொண்டாடுகிறேன். எனது வளர்ச்சியை கண்டு அவர் ஆனந்தப்படுகிறார். தமிழ் சினிமாவை நோக்கி அவரை நகர்த்திய முக்கிய நபர்களில் நானும் ஒருவன். முக்கியமான ஒரு சில முடிவுகள் எடுக்கும் முன்பாக அவர் என்னுடன் ஆலோசிப்பதும் உண்டு.

தமிழகத்தில் புஷ்பாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததில் மேலும் மகிழ்ச்சி. சுகுமார் எனக்கு அண்ணன் மாதிரி. நான் சந்தித்த அன்பான மனிதர்களில் அவரும் ஒருவர். அவர் மிகவும் மென்மையாக பழகக்கூடியவர். எங்கள் மூவருக்கும் பரஸ்பர புரிதல் உள்ளது. நாங்கள் பணியாற்றும் திரைப்படங்களில் அது பிரதிபலிக்கிறது”

**’புஷ்பா’ படத்துக்கு பின்னணி இசை அமைப்பதில் உங்களுக்கு எந்தளவு சுதந்திரம் இருந்தது?**

“சுகுமாரைப் பொறுத்தவரையில் அவர் முழுமையான படைப்பு சுதந்திரத்தை அளிக்கிறார். பின்னணி இசை பணிகளின்போது, அவரால் வர முடியவில்லை. ரெக்கார்டிங் முடிந்தவுடன் அனுப்புங்கள் என்று சொன்னார். அந்த அளவுக்கு என் வேலையில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. இது ஒரு புதிய முயற்சி என்பதால் பின்னணி இசையை அவர் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் அதை அனுப்பினால் போதும் என்று அவர் வலியுறுத்தியோடு, வெகு சில சிறிய மாற்றங்களை மட்டுமே சொன்னார். நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துவைத்துள்ளோம்”

**இப்போதெல்லாம் பாடல்களே இல்லாமல் சில படங்கள் வெளியாகின்றன. நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?**

“உலக அளவில் இசைக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. வெளிநாட்டு படங்களில் பாடல்கள் இல்லை. ஆனால், திரைப்படத்திலிருந்து இசையை பிரிக்கக் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும். பாடல்கள் பார்வையாளர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட உணர்வைத் தருகின்றன, மேலும் அவர்களை படத்துடன் ஒன்றவைக்க உதவுகின்றன. பாடல்கள் இல்லாத திரைப்படங்களை நான் ரசிக்கிறேன். ஆனால், அதிக ஆற்றலையும் இணைப்பையும் கொண்டு வரும் பாடல்களைக் கொண்ட படங்களைத்தான் நான் இன்னும் விரும்புகிறேன்.”

**முன்பெல்லாம் பாடல்கள் மொழியின் அடிப்படையில் வேறுபடுத்தப்பட்டன. இது இப்போது மாறிவிட்டதாகத் தெரிகிறதா?**

“இசைக்கு மொழி இல்லை என்று கூறப்படுகிறது. உண்மையில் இசைக்கு மொழி இல்லை. ஆனால், பாடல் வரிகள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்துடன் இணைக்கின்றன. நம் நாட்டில் பல மொழிகள் இருப்பதால், ஒரு பாடல் அனைவரையும் சென்றடைவது கடினம். நான் உருவாக்கும் பாடல்களை அனைத்து மாநில மக்களும் ரசிக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக்கொள்கிறேன்.”

**நீங்கள் ஓர் இசை இயக்குநரா அல்லது இசையமைப்பாளரா?**

“நான் ஒரு இசை ரசிகன், இளையராஜாவின் பக்தன் என்று கூட சொல்லலாம். அவர் எனக்கு கடவுள் போன்றவர், ஒரு படத்துக்கு பின்னணி இசை எப்படி அமைக்க வேண்டும் என்பதை மாற்றி அமைத்தவர் அவர். பாடல்களுக்கு எந்தளவும் குறையாத முக்கியத்துவத்தை பின்னணி இசைக்கும் வழங்குவதையே நான் விரும்புகிறேன்.”

**அகில இந்திய திரைப்படங்கள் பற்றிய உங்களது பார்வை?**

“பெயரும் புகழும் பெறத்தான் இந்தத் துறைக்கு வருகிறோம். அதற்கு பிராந்திய கட்டுப்பாடுகள் இருக்கக் கூடாது. இந்தித் திரைப்படங்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுவதால் அவை அகில இந்தியப் படங்கள் என்று அழைக்கப்படுவதில்லை. பிராந்திய சினிமாக்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் சமீப காலமாக பாகுபலி, கேஜிஎஃப், புஷ்பா போன்ற படங்கள் மூலம் இது மாறி வருகிறது. நாம் ஏன் ஒரு பிராந்தியத்திற்குள் நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்? அகில இந்திய படம் என்ற வார்த்தை விரைவில் மறைந்து, அனைத்து இந்தியாவுக்கான படமாக மாறி பின்னர் உலக சினிமாவாக மாறும்.”

**உங்களை எப்போது ஹீரோவாகப் பார்க்க முடியும்?**

“இசையமைப்பாளராக இருப்பது மட்டுமே எனது இலக்காக இருந்தது, அதனால்தான் ஆரம்பத்தில் நடிப்பதற்கு வந்த சில வாய்ப்புகளை மறுத்தேன். ஆனால் கொரோனா பெருந்தொற்று காலம் என் மனதை மாற்றிவிட்டது. அந்த காலம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அதனால் மிக விரைவில் நடிகராக அறிமுகம் ஆக இருக்கிறேன். அதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன” என்றார்.

**-இராமானுஜம்**

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *