மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலிஸ்தான் தீவிரவாதிகளைக் கொசுவை நசுக்குது போல நசுக்கினார் என்று கூறிய கையோடு டெல்லியில் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகளோடு ஒப்பிட்டு பேசினார் கங்கனா ரணாவத். இது சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் புண்படுத்துவதாகவும், கங்கனா ரணாவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெல்லி சிரோண்மணி குருத்வாரா கமிட்டி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து கங்கனா ரணாவத் மீது இந்திய தண்டனை சட்டம் 295ஆவது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் பயப்படுகிறவரா கங்கனா என்கிற தொனியில், சமூக வலைதளத்தில் தான் ஒயின் கோப்பையுடன் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்னொரு நாள், இன்னொரு எஃப்.ஐ.ஆர். ஒருவேளை என்னை அவர்கள் கைது செய்ய வந்தால், நான் வீட்டில் வேறொரு மூடில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
**-இராமானுஜம்**
�,”