டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ஏழாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகின்றன. சார்ஜாவில் நேற்று (அக்டோபர் 26) நடைபெற்ற குரூப்-2 பிரிவு லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி மோதியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதன்படி, நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணி கட்டுகோப்பான பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து அணியை கணிசமாகக் கட்டுப்படுத்தியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 135 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹாரிஸ் ராஃப் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை அள்ளினார். இதனை தொடர்ந்து பேட்டிங் செய்து விளையாடிய பாகிஸ்தான் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களான ரிஸ்வான் (33) மற்றும் பாபர் ஆசம் (9) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன்பின் விளையாடிய பகர் ஜமன் (11), ஹபீஸ் (11) மற்றும் வாசிம் (11) ரன்களில் வெளியேறினர். சோயப் மாலிக் (27) மற்றும் ஆசிப் அலி (27) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
அந்த அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் சோதி இரண்டு விக்கெட்டுகள், சான்ட்னர், டிம் சவுதீ மற்றும் போல்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப்-2 பிரிவில் பாகிஸ்தான் அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
**-ராஜ்**
.�,