த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா தயாரித்துள்ள படம் ஜெய் பீம். சூர்யா,பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தங்களுக்கென சொந்தமாக நிலம் இல்லாத, குடியிருக்க சொந்த வீடு இல்லாத நிலையிலும் எளிமையில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் பழங்குடி மக்களின் கடின உழைப்பு நிறைந்த வாழ்க்கையைப் பற்றிய கதைதான் ஜெய் பீம் திரைப்படம்.
நிகழ்காலத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஜெய்பீம் படத்தில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு வழக்கறிஞராக நடிகர் சூர்யா நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் கடந்தவாரம் வெளியானது இந்நிலையில் நேற்று (22.10.2021) படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது போலீஸ் காட்டும் அடக்குமுறை, அவர்களின் நீதிக்காக போராடும் சூர்யா என டிரைலர் காட்சிகள் பரபரப்பாக அமைந்துள்ளன.
‛‛பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கணும், அதை நீதிமன்றம் உறுதி செய்யணும். தப்பு செய்பவர்களுக்கு ஜாதி, பணம் என நிறைய இருக்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நாமதான இருக்கோம். நீதிக்கு ஆதரவான வார்த்தைகளை விட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மவுனம் ஆபத்தானது” என்கிற வசனம் ஆதிக்கசக்திகளின் அத்துமீறலை தோலுரித்துக்காட்டும் படம் என்பதை உணர்த்துகிறது. உணர்வுகளை தட்டியெழுப்பும் விறுவிறுப்பான காட்சிகளுடன் நகரும் டிரைலர் காட்சிகள் படம் மீதான எதிர்பார்ப்பை தற்போது அதிகப்படுத்தி உள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவ.,2 ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜெய்பீம் வெளியாகிறது.
**-இராமானுஜம்**
.�,