ரத்தமும் சதையுமாக, கரம் மசாலாவாகப் படங்களைத் தயாரித்து வெளியிட்டு வரும் தெலுங்கு சினிமாவில் லவ் ஸ்டோரி படம் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
பிரமாண்டம், கிராபிக்ஸ், கலர்ஃபுல்லான பாடல் காட்சிகள் பொங்கிவழியும் வகையில் தயாரிக்கப்படுவது மட்டும் படமல்ல. இவை எதுவும் இன்றி உணர்வுகளை உள்ளடக்கிய படங்களைத் தயாரித்தும் வெற்றி காணலாம் என்பதை லவ் ஸ்டோரி தெலுங்கு திரையுலகத்துக்கு உணர்த்தியிருக்கிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி தெலுங்கு படம் செப்டம்பர் 24ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. படம் வெளியான முதல் நாள் உலகம் முழுவதும் 10 கோடி ரூபாயை வசூல் செய்தது.
படத்தைப் பார்த்த தெலுங்கின் முதல்நிலை நடிகர் மகேஷ் பாபு மற்றும் பல்வேறு நடிகர் நடிகைகளும் ஏகத்துக்கும் புகழ்ந்து சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர். ஒட்டுமொத்த தெலுங்கு சினிமா ரசிகனும் லவ் ஸ்டோரி படத்தைப் பார்த்து வருகின்றனர். இதன் காரணமாக தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கதாநாயகன் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய நாகர்ஜுனா, “என் மகனை பற்றி என்ன சொல்வது. லவ் ஸ்டோரியில் நாக சைதன்யாவின் நடிப்பைப் பார்த்து திருப்தி அடைந்துவிட்டேன். நடிகர், ஸ்டார் என்பது இரண்டு வேறு விஷயங்கள், வார்த்தைகள் என்று நான் சேகர் கம்முலாவிடம் கூறினேன். நாக சைதன்யாவை ஸ்டார் நடிகராக்கியதற்கு நன்றி
சேகர் நீங்கள் அவரை புதிய பாதையில் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள். அதற்கு நன்றி. நாக சைதன்யா நீங்கள் அருமையாக நடித்திருக்கிறீர்கள். என்னை அழ வைத்தீர்கள், சிரிக்க வைத்தீர்கள்.
அப்பாவின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரிய ஹிட்டான பிரேம் நகர் ரிலீஸாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்தப் படம் ரிலீஸானபோது புயல் வந்தது. 50 ஆண்டுகள் கழித்து புயல் மற்றும் பான்டமிக் இடையே அதே செப்டம்பர் 24ஆம் தேதி லவ் ஸ்டோரி ரிலீஸாகியிருக்கிறது. லவ் ஸ்டோரி இன்னொரு பிரேம் நகராகி வருகிறது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.
**-இராமானுஜம்**
�,”