�
கொரோனா இரண்டாவது அலை காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டன. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஒவ்வொரு மாநிலமாக தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கி வருகின்றன.
இந்திய சினிமாவில் அதிகமான முதலீடு செய்கின்ற இந்தி சினிமா, அதிகமாக வசூல் செய்யக்கூடிய மகாராஷ்ரா மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்படாதது அவர்களுக்கு மட்டுமல்ல; பிற மொழி சினிமாவுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 22ஆம் தேதி முதல் அங்கு தியேட்டர்கள் திறக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் மாதம் தீபாவளி வருவதை முன்னிட்டு அதற்கு முன்னதாக தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளதாகத் தெரிகிறது.
ஆனாலும், கங்கனா ரணாவத் நடித்த ‘தலைவி’ படத்தின் வெளியீட்டுக்கு சிக்கல் ஏற்படுத்தவே தியேட்டர்கள் திறப்பைத் தள்ளிக்கொண்டு வந்தார்கள் என்றும் சமூக வலைதளங்களில் சிலர் கமென்ட் செய்துள்ளனர்.
தலைவி இந்திப் பதிப்பு ஓடிடியில் வெளியான தினத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தியேட்டர்கள் திறப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருக்கைகள் அனுமதி மற்றும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. பாலிவுட் திரையுலகத்தைச் சேர்ந்த சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்துப் பேசினர். அதன் பிறகே தியேட்டர் அறிவிப்பு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
**-இராமானுஜம்**
�,