fஅரசியல் படங்களைத் தயாரிக்கும் சூர்யா

entertainment

நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில், நான்கு திரைப்படங்களை ஓடிடி நிறுவனம் ஒன்றுக்குத் தயாரித்துக் கொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தனர்

ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற பெயரில் தயாரான படம் நேற்று வலைதளத்தில் 240 நாடுகளில் வெளியானது.

இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான சமூக நையாண்டி திரைப்படமான ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ கிராமிய வாழ்வியலை மையப்படுத்தி இருக்கிறது

மனிதநேய உணர்வுகளை நகைச் சுவை கலந்து உருவாக்கியிருக்கும், இத்திரைப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன், நடிகை வாணி போஜன், நடிகர் மிதுன் மாணிக்கம் மற்றும் வடிவேல் முருகேசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்‘ படத்தின் திரைக்கதை இந்தியாவும் அதன் இதய பகுதியாகத் திகழும் கிராமம் ஒன்றை உற்று நோக்குகிறது.

தென் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளைக் கதை மாந்தர்களாக வைத்துக் கொண்டு உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை அலசி ஆராய்ந்து துவைத்துத் தொங்கப்போட்டிருக்கிறது படம். நாயகன் மிதுன் மாணிக்கம், நாயகி ரம்யா பாண்டியன் ஆகிய இருவரும் பெற்ற பிள்ளைகள் போல் வளர்க்கும் கறுப்பன் வெள்ளையன் ஆகிய இரு காளை மாடுகள் திடீரெனக் காணாமல் போகின்றன.

இந்த மாடுகள் காணாமல் போனதால் தமிழ்நாடு அரசாங்கத்துக்கே அவப்பெயர். ஏன்? எப்படி? என்பதைச் சுவைப்படச் சொல்லியிருக்கிறார்கள்.

ஊடகவியலாளராக நடித்திருக்கும் வாணிபோஜன். தற்கால சூடு சொரணையுள்ள சமரசமற்ற ஊடகவியலாளர்களை நம் கண்முன் நிறுத்துகிறார். நாயகனின் நண்பர் மண் தின்னி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற வடிவேல் முருகேசன் பேசுகிற வசனங்கள் ஒவ்வொன்றும் அரசியல்தான். மிக அலட்சியமாக மிகப்பெரிய விசயங்களைப் பேசிக் கடந்து செல்கிறார்.

அப்பத்தா முதல் அனைத்துக் கதாபாத்திரங்களையும் திரையில் பார்க்கும்போதே ஆசையாக இருக்கிறது இப்படி ஒரு கிராமத்து வாழ்க்கை நமக்குக் கிடைக்காதா என ஏங்க வைக்கிறது. தன்னந்தனியாகக் குளம் வெட்டும் பெரியவர் கண்களைக் குளமாக்குகிறார்.

இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாயச் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோரை நினைவுபடுத்தும் வேடங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

கிரிஷ் இசையமைத்திருக்கிறார். பாடல்வரிகளில் சமுதாய அக்கறையும் சமுதாய விமர்சனங்களும் நிறைந்திருக்கின்றன.

குக்கிராமத்துச் சந்தைகள் வரை ஊடுருவிவிட்ட மார்வாடிகளைக் காட்டி எச்சரிக்கும் அதேநேரத்தில், இந்தி தெரியாது போடா என வேகமாகச் சொல்லி, இது தமிழ்நாடுடா என்று உரத்துச் சொல்லியிருக்கிறது படம்.

மாநில அரசியல் தொட்டு ஒன்றிய அரசு வரை நீக்க மற நிறைந்திருக்கும் திட்ட தில்லுமுல்லுக்களைத் தோலுரிக்கும் அரிசி மூர்த்தியின் அரசியல் பார்வை, பார்வையாளனை அதிரவைக்கும் கல்வியும், அரசின் திட்டங்களும் எட்டாத குக்கிராமங்களில் கூட இந்தியின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

மக்களைப் பாதிக்கின்ற மாணவர்களைப் பாதிக்கின்ற கல்விமுறைகள், சமூக சீர்கேடுகள் பற்றி பொதுவெளியில் தயக்கமின்றி கருத்துக்களை வெளியிடும் சூர்யா இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்

கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் அந்த சம்பளம் கிடைப்பதற்குக் காரணமான பொதுமக்கள் சார்ந்த பிரச்சினைகளைக் கண்டு கொள்வதும், கருத்து சொல்வதும் இல்லை தொழில் ரீதியாக தாங்கள் பாதிக்கப்படுவோம் என்கிற அச்ச உணர்வில் அவர்களிலிருந்து வேறுபட்டு மசாலா படங்களில் நடித்தாலும் அரசியல் ரீதியான படங்களைத் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிப்பதில் முன்வரிசையில் இருக்கிறார் நடிகர் சூர்யா.

**-இராமானுஜம்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *