இந்தியா நேற்று (செப்டம்பர் 5) இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவை என்பதால் ஓவல் டெஸ்ட் பரபரப்பான நிலைக்குச் சென்றுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி இந்திய அணியைவிட 99 ரன்கள் முன்னிலை பெற்றது.
99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மாவின் சதம் (127 ரன்கள்) , ரிஷப் பண்ட் அரை சதம் (50 ரன்கள்), ஷர்துல் தாகூர் அரை சதம் (60 ரன்கள்) ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 466 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 368 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்ட இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இங்கிலாந்து வீரர்கள் மிகவும் கவனமுடனும் ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்து இந்திய பந்து வீச்சாளர்களை சோதித்தனர்.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு 10 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் வெற்றிக்கு இன்னும் 291 ரன்கள் தேவைப்படுகிறது.
இன்று (செப்டம்பர் 6) ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. வெற்றிக்கு இரு அணிகளும் பகீரத பிரயத்தனம் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால், ஓவல் டெஸ்ட் போட்டி பரபரப்பான நிலையை எட்டியுள்ளது.
**-ராஜ்**
�,