தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் பெறும் பெண் நடிகை நயன்தாரா. தமிழின் டாப் நடிகர்களுக்கு பெரும்பாலும் நாயகியாக நயன் இருக்கிறார். அஜித், விஜய், ரஜினி என அனைத்துப் பெரிய ஹீரோக்களின் படங்களிலும் நடித்துவிட்டார் நயன்தாரா. ஹீரோவுக்கு ஜோடியாக ஒரு பக்கம் நடித்துவந்தாலும், நாயகி முக்கியத்துவம் கொண்டப் படங்களையும் அதிகமாகத் தேர்ந்தெடுக்கிறார்.
நயன்தாரா நடிப்பில் லேட்டஸ்டாக தமிழில் மூக்குத்தி அம்மன் படமும், மலையாளத்தில் நிழல் படமும் வெளியானது. இந்நிலையில், இவருக்கான அடுத்த ரிலீஸ் ‘நெற்றிக்கண்’. சித்தார்த் நடித்து வெளியான அவள் படத்தை இயக்கிய மிலிந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். பார்வை சவால் கொண்ட கேரக்டரில் நயன் நடித்திருக்கிறார். இப்படத்தை விக்னேஷ்சிவனும் நயன்தாராவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
சொல்லப்போனால், தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காதல் ஜோடி இவர்கள். இருவரின் காதல் வாழ்க்கைப் பற்றி எந்த பொதுவெளியிலும் இருவரும் வெளிப்படையாகப் பேசியதில்லை. திருமணம் குறித்து எந்த தகவலும் வெளிப்படையாகக் கூறியதில்லை. தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து பொதுவெளியில் சொல்லத் தேவையில்லை என்றே இருவரும் நினைத்தார்கள்.
இந்நிலையில், தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்துப் பொதுவெளியில் முதன்முறையாகப் பேச இருக்கிறார் நயன்தாரா. நெற்றிக்கண் படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பொதுவா, படங்களில் புரோமோஷன், பட விழாக்கள் போன்றவற்றில் நயன்தாரா கலந்துகொள்வதில்லை. அதனால், பல சிக்கல்களைச் சந்தித்திருக்கும் வரலாறு நயனுக்கு உண்டு.
இப்படியிருக்கையில், நெற்றிக்கண் படத்தை சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்திருப்பதால், விஜய் டிவிக்கு நேர்காணல் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. அந்த நேர்காணலில் விக்னேஷ் சிவனுடனான காதல் குறித்தும், நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதையும் அறிவித்திருக்கிறார் நயன்தாரா. அந்த நேர்காணலுக்கான புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்த நேர்காணலில் திருமணம் எப்போது என்பது குறித்தும் பேசி இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிகளின் திருமணம் உறுதியாகியிருக்கும் நிலையில், இதுகுறித்த பின்னணியும் தெரியவந்திருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே திருமணம் குறித்த எந்த ஐடியாவும் இல்லாமல் இருந்தவர்களை கடந்த ஆறு மாத காலம் மிகப்பெரிய முடிவுகளை எடுக்க வைத்திருக்கிறது.
நயன்தாராவின் தந்தைக்கு சமீபத்தில் உடல் நிலை மோசமாகியிருக்கிறது. நயன்தாராவின் திருமணத்தைப் பார்த்துவிட வேண்டுமென்று ஒட்டுமொத்தக் குடும்பமும் விரும்பியிருக்கிறது. சமீபத்தில் கூட, தனி விமானத்தில் கொச்சி சென்று வந்தார் நயன். குடும்பத்தின் கட்டாயத்தில் திருமணத்துக்கு சம்மதமும் கூறியிருக்கிறாராம். அப்படி, திருமணமே வேண்டாம் என இருந்தவரை திருமண வாழ்க்கைக்குள் இழுத்துச் சென்றிருக்கிறது சூழல். எதுஎப்படியோ, ரசிகர்கள் செம ஹேப்பி !
**- தீரன் **
�,