தமிழ் சினிமாவின் ட்ரிப்பியான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. நிகழ் உலகத்தில் இருந்துகொண்டு இணை உலகம் குறித்துப் பேசிக் கொண்டிருப்பார். நம்முடன் பேசிக்கொண்டே ஏலியனிடமும் உரையாற்றுவார். எதார்த்த வாழ்வியலை அசால்டாக திரைமொழியாக்குவார். தமிழ் சினிமாவுக்குள் வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டது. இருப்பினும், அவர் தந்த படைப்புகள் இரண்டு மட்டுமே. கலைஞர்களுக்கு எண்ணிக்கை மதிப்பிடுவதில்லை என்பதற்கு தியாகராஜன் ஒரு சான்று.
2010ல் எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் இவர் இயக்கத்தில் வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் ஜாக்கி ஷெராஃப், ரவிகிருஷ்ணா, சம்பத் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கோலிவுட் ரசிகர்களுக்கு புதியதொரு அனுபவமாக அமைந்தது ஆரண்ய காண்டம். இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு, இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போனார். பத்து வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு ஆச்சரியத்தைக் கொண்டுவந்தார். அதுதான் `சூப்பர் டீலக்ஸ்’.
விஜய் சேதுபதி, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா என யோசித்துப் பார்க்க முடியாத நடிகர்களை ஒன்றிணைத்து,யோசிக்கவே யோசிக்கும் காட்சிகளை வடிவமைத்து வேறொரு கோணத்தில் சினிமாவை சூப்பர் டீலக்ஸில் காட்டினார்.
கதைகளிலும் , திரைக்கதைகளிலும் புதிய யுக்தியைக் கையாளும் இவரின் அடுத்தப் படம் குறித்த தகவல் சமீபத்தில் கசிந்தது. அதன்படி, இவர் அடுத்ததாக ஒரு வரலாற்று கதையை படத்துக்கான கதை அமைக்கும் பணியில் இருந்தார். அதோடு, பைக்கில் ஒரு டிராவல் மேற்கொள்ளவும் இருந்தார். ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் அந்த பயணம் தடைபட்டது.
தற்பொழுது, ஷார்ட் டைமில் ஒரு ஆந்தாலஜி ஒன்றை எடுக்க திட்டமிட்டிருக்கிறார் தியாகராஜன் குமாரராஜா. இந்தப் படத்தை இவருடன் இணைந்து பாலாஜி சக்திவேலும் பாலாஜி தரணிதரனும் இயக்க இருக்கிறார்கள். வட சென்னையை மையமாகக் கொண்ட ஆந்தாலஜி என்கிறார்கள். விரைவிலேயே இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும்.
சூப்பர் டீலக்ஸ் படமே ஒரு ஆந்தாலஜி லுக்கில் இருக்கும். ஆனால், சினிமாவில் சொல்லப்படும் பட்டர்ஃப்ளை விதியின் படி திரைக்கதை அமைத்திருப்பார். சமீபத்தில் வெளியாகும் ஆந்தாலஜி படங்கள் அனைத்துமே ரசிகர்களுக்கு சோர்வை ஏற்படுத்திவருகிறது. அந்த டிரெண்டையும் உடைப்பார் தியாகராஜன் என நம்பலாம்.
**- ஆதினி**
�,