டான் ஷூட்டிங்கில் அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?

entertainment

சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகிவருகிறது. ஒன்று, நெல்சன் இயக்கத்தில் டாக்டர். இப்படம், முழுமையாக முடிந்துவிட்டது. ரிலீஸூக்காக வெயிட்டிங்.

இரண்டாவது, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கத்தில் அயலான். இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் சயின்ஸ்பிக்‌ஷன் திரைப்படம். சிஜி பணிகள் அதிகமாக இருப்பதால் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையிலும், படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது.

மூன்றாவது, புதுமுகம் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகிவரும் ‘டான்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள்.

இந்தப் படப்பிடிப்பு கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. லாக்டவுன் தளர்வுகளின்படி, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை முக்கோணம் மற்றும் ஆற்றுப்பாலம் பகுதியில் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

படப்பிடிப்புக்கு அரசு அனுமதி அளித்ததன் பெயரில் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. அதோடு, படப்பிடிப்பு குறித்த செய்தி கேட்டு உள்ளூர் மக்கள் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் ஏராளமானோர் கூடினர். இதனால், சம்பவ இடத்துக்கு போலீஸ் அதிகாரிகள் வந்துசேர்ந்தனர்.

விசாரணைக்குப் பிறகு, தொற்றுத்தடை உத்தரவுக்கு கீழ்படியாமை, தொற்றுநோயை கவனக்குறைவாக பரப்பும் செயல், தொற்றுநோய் பரவல் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அதோடு, சட்டத்தை மீறியதன் குற்றத்தால் ரூ.19,400 அபராதமும் படக்குழுவுக்கு விதிக்கப்பட்டது.

தமிழகமெங்கும் படப்பிடிப்புகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருக்கும் நிலையில், டான் ஷூட்டிங்கில் பிரச்னை ஏற்பட வேறு ஒரு காரணமும் இருக்கிறது. படப்பிடிப்பில் முக்கிய காட்சி ஒன்று படமாக்கத் திட்டமாம். அதன்படி, அந்த ஷூட்டிங்கில் 500 பேருக்கு மேல் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார்கள். கோவை மாவட்டத்தைச் சுற்றிய மக்களைப் பயன்படுத்தியே படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறது டான் படக்குழு. படப்பிடிப்புக்குச் சென்று வருபவர்களால் உள்ளூரில் கொரோனா தாக்கம் அதிகமாகிவிடுமென்பதால் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தவே உள்ளூர் மக்கள் கூடியுள்ளனர்.

100 பேருடன் மட்டுமே படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அதிகமான நபர்களுடன் படப்பிடிப்பை நடத்தியதே பிரச்னைக்குக் காரணம். கொரோனா மூன்றாம் அலை குறித்த அச்சம் வேகம் கொண்டிருக்கும் சூழலில் தமிழ் சினிமாவினரும் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டியது அவசியம். அரசு அறிவிக்கும் தளர்வுகளை சாதகமாகக் கொண்டு சட்டத்தை மீறினால் அவதிபடப் போவது நாம் தான் என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

**- தீரன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *