இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்தியாவின் வெற்றியைப் பறித்த மழை!

entertainment

நாட்டிங்காம் டெஸ்டின் நேற்றைய கடைசி நாளில் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பு இருந்த நிலையில், நாள் முழுவதும் மழை பெய்ததால் போட்டி கைவிடப்பட்டு டிரா ஆனது.

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 278 ரன் எடுத்தது. இது இங்கிலாந்து ஸ்கோரை விட 95 ரன் கூடுதலாகும்.

தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடி 84 ரன்னும், ஜடேஜா 56 ரன்னும் எடுத்தனர். ராபின்சன் 5 விக்கெட்டுகளும் , ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள்.

95 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன் எடுத்து இருந்தது.

இந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நடைபெற்றது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் பொறுமையாக விளையாடி சதமடித்தார். 109 ரன்னில் ஆட்டமிழந்தார். சாம் கர்ரன் 32 ரன்னும், பேர்ஸ்டோவ் 30 ரன்னும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் பும்ரா ஐந்து விக்கெட்டுகளும், சிராஜ், ஷர்துல் தாகுர் தலா 2 விக்கெட்டுகளும், ஷமி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், ரோகித் சர்மா களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்த நிலையில் கே.எல்.ராகுல் 26 ரன்னில் வெளியேறினார்.

நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 12 ரன்னும், புஜாரா 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்றைய கடைசி நாளில் 9 விக்கெட் கைவசம் இருக்கும் நிலையில், 157 ரன்கள் அடித்தால் வெற்றியை ருசிக்கலாம் என்ற கனவில் இந்தியா களம் இறங்க இருந்தது. அதுவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக காலையில் இருந்து நாட்டிங்காமில் மழை பெய்ய தொடங்கியது.

ஆகவே போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் மதிய உணவு இடைவேளை வரை போட்டி தொடங்கவில்லை. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகாவது விளையாட முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால் தேநீர் இடைவேளை வரை போட்டி தொடங்கப்படவில்லை.

இதனால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு மங்கியது. மழை விட்டுவிட்டு பெய்ய ஆரம்பித்ததால், போட்டியைத் தொடங்குவதற்கான அறிகுறி தென்படவில்லை. இறுதியாக கடைசி நாள் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் போட்டி டிரா ஆனது.

இந்திய அணி எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருந்த நிலையில், மழையால் அந்த வெற்றி பறிபோனது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *