Wசிவகார்த்திகேயனின் அடுத்த படம்!

entertainment

குறுகிய காலத்தில் மிகப்பெரிய உச்சம் தொட்டவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகிவருகின்றன.

ஒன்று, நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள்மோகன், வினய் நடிப்பில் ‘டாக்டர்’. இந்தப் படம் முழுமையாக முடிந்துவிட்டது. ரிலீஸுக்கான சரியான நேரத்துக்காகக் காத்திருக்கிறது. மார்ச் 26ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய இந்தப் படம் தேர்தல், கொரோனா இரண்டாம் அலை காரணங்களால் தள்ளிப் போனது. தற்போது, ஓடிடியா அல்லது திரையரங்க ரிலீஸா என்பது இன்னும் உறுதியாகாததால் தள்ளிப்போயிருக்கிறது. இந்தப் படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இரண்டாவது, ‘இன்று நேற்று நாளை’ படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அயலான்’. அறிவியல் புனைவுத் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் போய்க் கொண்டிருக்கிறது. ஏலியன் கான்செப்ட் என்பதால் சிஜி பணிகள் எக்கச்சக்கமாக இடம்பெறுகின்றன. அதனால், படத்தின் ரிலீஸ் தாமதமாகிறது. எப்படியும், டிசம்பரில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை ஆர்.டி.ராஜாவுடன் இணைந்து கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரித்து வருகிறது.

மூன்றாவது, புதுமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் டான். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடந்துவருகிறது. இந்தப் படம், எப்படியும் இரண்டொரு மாதத்தில் முடிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.

திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு போட்டி நடிகராக விஜய் சேதுபதி பார்க்கப்படுகிறார். ஆனால், இருவருமே அடுத்த படம் கமிட்டாவதில் மிகப்பெரிய வித்தியாசத்தைக் காட்டுகிறார்கள். ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து எக்கச்சக்கப் படங்களை கமிட் செய்துவிடுவது சேதுபதி வழக்கம். ஆனால், ஒரு படத்தை முடித்துவிட்டு நிதானமாக அடுத்தப் படத்தைத் திட்டமிடுகிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது, டான் படப்பிடிப்பு முடியும் கட்டத்துக்கு வந்துவிட்டதால், அடுத்த படத்தின் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. அட்லீயிடம் உதவியாளராக இருந்த அசோக் என்பவர் இயக்க இருக்கிறாராம். இந்தப் படத்தையும் ஜே.கே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. கூடுதல் தகவலாக, அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குமென கூறப்படுகிறது.

**-தீரன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *