தமிழ் பேசத்தெரிந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகைகள் தமிழ் சினிமாவில் மிகக்குறைவே. அண்டை மாநிலங்களைச் சேர்ந்த நடிகைகளே தமிழ் சினிமாவில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
இருப்பினும், அவ்வப்போது தமிழ் நடிகைகளும் லைம் லைட்டுக்குள் மிளிர்வார்கள். பெரிய உயரங்களைத் தொடுவார்கள். தமிழைத் தாண்டி பிற மொழிப் படங்களிலும் நடிப்பார்கள். அப்படியான ஒரு நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். நடிகைகள் என்றாலே வெள்ளை நிற அழகு என்கிற ஃபார்மெட்டை உடைத்தெறிந்து, டஸ்கி ஸ்கின்னுடன் தனக்கான இடத்தைப் பிடித்தவர்.
2010-லிருந்தே சின்னச் சின்ன ரோல்களில் நடித்துவந்தாலும் விஜய்சேதுபதியுடன் ரம்மி படம் மூலமாக பிரபலமானார். மணிகண்டனின் காக்கா முட்டை படம் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. அதிலிருந்து, தேர்ந்தெடுத்துப் படங்களில் நடித்துவருகிறார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவிலும் நடித்துவருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான ‘கனா’ மற்றும் விஜய்சேதுபதியுடன் நடித்திருந்த க/பெ.ரணசிங்கம் ஆகியவை நாயகி முக்கியத்துவம் கொண்ட படங்களாக வெளியானது.
ஒன்றிரண்டு படங்களென நடித்துக் கொண்டிருந்தவர், சைலண்டாக எக்கச்சக்கப் படங்களை முடித்துவிட்டார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஏழு படங்கள் இவருக்கு ரிலீஸூக்கு தயாராகியிருக்கிறது.
தமிழில் நான்கு படங்களும், தெலுங்கில் மூன்று படங்களும் நடித்துமுடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படி, தமிழில் பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ் படங்களாகும். தெலுங்கில் ரிபப்ளிக், ட்க் ஜகதீஸ், மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் பட தெலுங்கு ரீமேக் படங்கள் கையில் இருக்கிறது.
இந்த ஏழு படங்களும் அடுத்தடுத்து வெளியானால், திரைத்துறையில் ஐஸ்வர்யா ராஜேஷின் மார்க்கெட் எகிறும். அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் அதிகமாகும். தமிழின் உச்ச நடிகைகள் கூட ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே கையில் வைத்திருக்கும் சூழலில், சைலண்டாக ஏழு படங்கள் கையில் வைத்திருப்பது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
**- ஆதினி**
�,