ஆக்ஷன் மாஸ் கமர்ஷியல் என ஒஸ்தி ஹீரோவாகப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் சிம்புவை செம கூலாகக் காட்டிய படம் ‘போடா போடி’. படம் பெரிதாக ஓடவில்லையென்றாலும், அந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் திரையுலகின் லைம் லைட்டுக்குள் வந்தார்.
விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுத்தார். தொடர்ந்து, சூர்யா நடிக்க ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கினார்.
இதற்கு நடுவே, நயன்தாராவுடனான காதலும் வளர்ந்தது. தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார்கள். இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த 2020இல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’. மொத்தம் நான்கு கதைகள் கொண்ட ஆந்தாலஜியை சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன் மற்றும் வெற்றி மாறன் ஆகிய நான்கு இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். கடந்த டிசம்பரில் இந்த ஆந்தாலஜி வெளியானது.
இந்த ஆந்தாலஜியின் விக்னேஷ் சிவன் இயக்கிய கதை ‘லவ் பண்ணா உட்ரணும்’. இந்தக் கதையில் அஞ்சலி இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின் முக்கிய லீடாக நடித்திருந்தார். தன்பால் ஈர்ப்பாளர்கள் குறித்த கதையம்சம் கொண்ட இந்தக் குறுங்கதை ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது.
சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்குப் பதிலளித்தார் விக்னேஷ் சிவன். அப்போது, ரசிகர்கள் ஒருவர் தொடர்ந்து குறுங்கதைகளைப் படமாக்கும் விருப்பம் இருக்கிறதா என்று கேட்க, ‘லவ் பண்ணா உட்ரணும்’ கதையின் சீக்குவலை உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஜூலை மாதத்திலிருந்து விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறார். அதோடு, இவரின் தயாரிப்பில் நயன் நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ படத்தை ரிலீஸ் செய்யும் பணிகளும் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்கிறது.
**- ஆதினி**
�,