ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் த்ரிஷ்யம். இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான ‘த்ரிஷயம் 2’ கடந்த பிப்ரவரியில் நேரடியாக ஓடிடியில் வெளியானது. முதல் பாகம் போலவே, இந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
முதல் பாகமான த்ரிஷ்யம் மலையாளத்திலிருந்து தெலுங்கு, கன்னடம், இந்தி, துளு மற்றும் தமிழ் மொழிகளிலும் ரீமேக் ஆனது. அதோடு, சீன மொழி மற்றும் சிங்கள மொழியிலும் படம் உருவானது. வெளியான அனைத்து மொழிகளும் பெரிய வெற்றியைப் பெற்றது.
தெலுங்கில் வெங்கடேஷ், மீனா நடித்திருந்தனர். கன்னடத்தில் ரவிச்சந்திரன், நவ்யா நாயர் நடித்திருந்தனர். இந்தியில் அஜய்தேவ்கனும் ஸ்ரேயாவும் நடித்திருந்தனர். அதுபோல, தமிழில் கமல்ஹாசனும், கெளதமியும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் தெலுங்கு ரீமேக் முதல்கட்டமாக தொடங்கியது. வெங்கடேஷ், மீனா நடிக்க 40 நாட்களுக்குள் ஒட்டுமொத்தப் படத்தையும் படக்குழு முடித்துவிட்டது. த்ரிஷ்யம் 2 வெளியானது போலவே, தெலுங்கு வெர்ஷனும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
தொடர்ந்து, மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருக்கிறது. தெலுங்கினைத் தொடர்ந்து இந்தி வெர்ஷன் படம் உருவாக இருக்கிறது. இந்தியில், த்ரிஷ்யம் முதல் பாகத்தை நிஷிகந்த் காமந்த் இயக்கியிருந்தார். தற்போது, அவர் மறைந்துவிட்டதால் வேறு இயக்குநரைத் தயாரிப்புத் தரப்பு தேடிவருகிறது. அதற்குள், இந்தியிலும் ஜீத்து ஜோசப் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது.
இந்தியில் இயக்குநராவது குறித்து ஜீத்து ஜோசப் மறுத்திருக்கிறார். அதோடு, இதுகுறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வேறு யார் இயக்கினால் நன்றாக இருக்கும் என்று ஜீத்துவிடம் கேட்டதற்கு, “அதை தயாரிப்பு நிறுவனம் முடிவு பண்ணட்டுமே என்று பதில் கூறியிருக்கிறார்.
தமிழிலும் பாபநாசம் 2வுக்கான பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. கமல் நடிக்க ஆர்வமாக இருந்தாலும் கெளதமிக்குப் பதில் யாரென்பது மட்டும் உறுதியாகிவிட்டால் அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
**- ஆதினி**�,”