ஜெகமே தந்திரம் படத்துக்காக நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இருவரையும் சரமாரியாகத் திட்டிவருகிறார்கள் ரசிகர்கள். படத்தின் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனால், தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருக்கும் நேரத்தில் அப்படியே, இன்னொரு பக்கம் சிம்பு ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள். இதற்கு காரணம், மாநாடு படம் என்றாலும், அசுரனை அழிக்க வந்த ஈஸ்வரன் மொமண்ட் இணையம் முழுவதும் நிறைந்து இருக்கிறது.
சிம்பு நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்க உருவாகிவரும் படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பிரமாண்டமாகப் படம் உருவாகிவருகிறது. இந்தப் படத்துக்காக பிரமாண்டமான அரசியல் மாநாடு செட் அமைத்து ஆயிரக்கணக்கான ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் நடிக்க படம் தயாராகிவருகிறது. படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் கடந்த மே மாதம் முதல் டப்பிங் பணிகளும் தொடங்கிவிட்டது.
சிம்புவுக்கான டப்பிங் பணிகள் நேற்றிலிருந்து தொடங்கி நடந்துவருகிறது. சிம்புவின் டப்பிங்கோடு படத்தின் மேஜர் வேலைகள் முடிகிறதாம். இந்தப் படத்தில் முஸ்லிம் இளைஞராக சிம்பு நடித்திருக்கிறார். 24 மணி நேரத்தில் நடப்பது மாதிரியான கதைக்களம்.
சிம்பு டப்பிங் வேலையைத் தொடங்கிய அப்டேட் உடன் இன்னொரு சர்ப்ரைஸும் சிம்பு ரசிகர்களுக்கு வெயிட்டிங். மாநாடு படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிள் வருகிற ஜூன் 21ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கும் நிலையில், சிங்கிளுக்கான டீஸர் வெளியாகியுள்ளது.
படத்திலிருந்து வெளியாகும் முதல் சிங்கிளுக்கு ‘Meherezylaa’ என பெயரிட்டுள்ளனர். இந்தப் பாடலை, யுவனுடன் இனைந்து பவதாரணி பாடியிருக்கிறார். இது ஒரு குடும்பப் பாடல் என்கிறார் வெங்கட்பிரபு.
ஏற்கெனவே, யுவன் இசையில் ‘தாமிரபரணி’ படத்தில் ‘தாலியே தேவை இல்லை’ பாடலையும், ‘புதிய கீதை’ படத்தில் ‘மெர்குரி பூவே’ பாடலையும் பாடியிருக்கிறார் பவதாரணி. தற்போது, இருவரும் இணைந்துப் பாடுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
**- ஆதினி **
�,